2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு
சென்னை: யு.எஸ்.ஐ.இ.எஃப் அமைப்பு, இந்தியக் குடிமக்களிடமிருந்து 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான தேர்வுக்குழு, அமெரிக்க மற்றும் இந்திய துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் முன்னாள் ஃபுல்ப்ரைட் விருது பெற்ற அறிஞர்களை உள்ளடக்கி இருக்கும். தங்களது துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் இந்திய கலாச்சார பிரதிநிதியாக இருப்பதற்கு திறமை வாய்ந்தவர்கள், இந்த ஃபெலோஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் அறிய, www.usief.org.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஃபுல்ப்ரைட்-நேரு மற்றும் இதர ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப்களுக்கான வருடாந்திர போட்டிக்கான அறிவிப்பை தி யுனைடெட் ஸ்டேட்ஸ்-இந்தியா எஜுகேஷனல் ஃபவுண்டேஷன் (யு.எஸ்.ஐ.இ.எஃப் - USIEF) வெளியிட்டுள்ளது. அமெரிக்க, இந்திய அரசுகளின் நிதியுதவியுடன் இது செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய பரிமாற்றங்களின் மூலம், இதில் பயிற்சிபெறுவோரின் கல்வி, ஆராய்ச்சி, பயிற்றுவித்தல், மற்றும் தொழில் முறை சார்ந்த திறன்கள் மேம்படுத்தப்படுவதால், இரு நாடுகளுக்கிடையேயான உறவில் நெருக்கம் அதிகரிக்கிறது.
இப்பரிமாற்றம் மற்றும் ஸ்காலர்ஷிப் ப்ரோகிராம்களின் விருது பெற்ற அறிஞர்கள், தங்களது கல்வி மற்றும் பணியில் சிறந்த தலைமை பண்புடன் இருப்பது நிரூபணமாகியுள்ளது. குறிப்பிட்ட துறைகளில், தகுதி வாய்ந்த, சிறந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், மற்றும் பணியாளர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஃபுல்ப்ரைட்-நேரு முதுகலை அறிஞரான கௌதமன் ரங்கநாதன் இது குறித்து தனது அனுபவத்தைப் பகிர்கையில், "எனது எல்.எல்.எம். படிப்பை அமெரிக்காவில் முடிப்பதை, அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள் அளித்த ஆதரவே சாத்தியப்படுத்தியுள்ளது. ஆஸ்டின் நகரிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நான் பயின்ற காலகட்டத்தை எனது வாழ்நாளை மாற்றியமைத்த அனுபவமாகக் கருதுகிறேன். அங்கு நன்முறையில் படித்ததோடு, சட்டப்பள்ளியிலுள்ள ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து, வரலாறு மற்றும் அரசாங்கம் குறித்த பாடங்களை படித்ததால், எனது சட்ட அறிவு விரிவடைந்தது என்கிறார்.
பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் ஃபுல்ப்ரைட்-நேரு மருத்துவ ஆய்வு மாணவரான ஆகர்ஷ் வெர்மா, "தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதில் எனது ஆராய்ச்சி திறனை மேம்படுத்த உதவியது" என்று குறிப்பிடுகிறார். மேலும், அமெரிக்காவிலுள்ள, அதிகத் தரம் வாய்ந்த ஆய்வு மற்றும் கல்விக்கூட உள்கட்டமைப்பானது, பொறியியல் துறை சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில், உலகளாவிய அனுபவத்தைப் பெற உதவியதாகக் கூறுகிறார்.
ஃபுல்ப்ரைட்-நேரு அகாடமிக் அண்ட் ப்ரொஃபஷனல் எக்ஸலன்ஸ் அறிஞரான அபிட் பாண்டே கூறுகையில், "இங்கே புதிய நட்புகளைச் சம்பாதித்ததோடு, நோய் எதிர்ப்பு சக்திகளை மருந்தாகப் பயன்படுத்தி, புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கும் இலக்குடன் செயல்படும் கீமோதெரபி சிகிச்சையில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டேன். இது, உலகளாவிய பொது பிரச்சனையான புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியில் பங்கேற்க உதவும். தனிப்பட்ட முறையில், அமெரிக்க மக்களுடனான எனது தொடர்புகள், இவ்வுலகின் நலனுக்காக எனது பங்களிப்பை வழங்குவது குறித்து தெரிந்துகொள்ள உதவியது."
தொடர்புகளை அதிகரிப்பது, சரியான புரிதல்களை ஏற்படுத்துவது, பொதுவான குறிக்கோளை நோக்கி இரு நாடுகளின் மக்களும் இணைந்து செயல்பட உதவுவது உள்ளிட்ட பல்வேறு இலக்குகளைக் கொண்ட, அமெரிக்க அரசாங்கத்தின் உலகளாவிய ஃபுல்ப்ரைட் ப்ரோகிராமின் 75வது ஆண்டு விழாவை, இதன் பங்கேற்பாளர்கள், பங்குதாரர்கள், மற்றும் நண்பர்கள் இந்த ஆண்டு கொண்டாடுகிறார்கள்.
அமெரிக்க செனட்டர் மற்றும் இந்த ஃபெலோஷிப் அமைக்க காரணமானவரான ஜே. வில்லியம் ஃபுல்ப்ரைட்டின் இலக்கான, "உலக விவகாரங்களில் சற்று கூடுதலான அறிவு, சற்று கூடுதல் புரிதல், சற்று கூடுதல் இரக்கம்" என்பதை எட்டுவதில், யு.எஸ்.ஐ.இ.எஃப் அமைப்பின் அர்ப்பணிப்பான செயல்பாட்டை இந்த கொண்டாட்டம் புதுப்பிக்கும். மேலும், "உலக நாடுகள் அனைத்தும் அமைதி மற்றும் நட்புறவோடு வாழ்வது குறித்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க உதவும்."
யு.எஸ்.ஐ.இ.எஃப் அமைப்பு, இந்தியக் குடிமக்களிடமிருந்து 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான தேர்வுக்குழு, அமெரிக்க மற்றும் இந்திய துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் முன்னாள் ஃபுல்ப்ரைட் விருது பெற்ற அறிஞர்களை உள்ளடக்கி இருக்கும். இந்த ஃபெலோஷிப் விருதானது, கலை, மனிதநேயச்செயல்பாடுகள், சமூக அறிவியல் மற்றும் ஸ்டெம் (Science, Technology, Engineering, and Mathematics) துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள், மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு வழங்கப்படுகிறது.
தங்களது துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் இந்திய கலாச்சார பிரதிநிதியாக இருப்பதற்கு திறமை வாய்ந்தவர்கள், இந்த ஃபெலோஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் அறிய, www.usief.org.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
விண்ணப்பதாரர்கள் இதுகுறித்து மேலும் தகவல்களைப் பெற [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம், அல்லது டெல்லி, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மற்றும் மும்பையிலுள்ள யு.எஸ்.ஐ.இ.எஃப் அமைப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் யூனியன் பிரதேசங்களான லட்சத்தீவு, புதுச்சேரி, மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி மேலும் விவரங்களைப் பெறலாம்.