உசிலம்பட்டி பெண் சிசுக்கொலை...என்று முடிவுக்கு வரும் இந்தக் கொடுமை - டாக்டர் ராமதாஸ் வேதனை
உசிலம்பட்டி அருகே பெண் குழந்தைகள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும் இது வேதனையளிப்பதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை சிசுக்கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.என்று முடிவுக்கு வரும் இந்தக் கொடுமை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியில் சின்னச்சாமி சிவப்பிரியங்கா தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும் 3 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு 3ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கின்றனர். இந்த சூழலில்தான் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்துவிட்டதாக உறவினர்களிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதனால் குழந்தையின் பெற்றோரே கொலை செய்திருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் சந்தேகித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் 7 நாள் பெண் குழந்தை உயிரிழந்த வழக்கில் பாட்டி நாகம்மாள் கைது செய்யப்பட்டார். மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக பாட்டி நாகம்மாள் ஒத்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'தொடருது கொடுமையிலும் கொடுமை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை சிசுக்கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். என்று முடிவுக்கு வரும் இந்தக் கொடுமை?'' என்று அவர் தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தொடருது கொடுமையிலும் கொடுமை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை சிசுக்கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. என்று முடிவுக்கு வரும் இந்தக் கொடுமை?#FemaleInfanticide
— Dr S RAMADOSS (@drramadoss) February 20, 2021
மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 3 பெண் சிசுக்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாக்க தொட்டில் குழந்தை திட்டம் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்படி இருந்தும் பெண் சிசுக்களை வளர்க்க முடியாமல் நெல் மணிகளை கொடுத்தும் கள்ளிப்பால் ஊற்றியும் கொலை செய்யும் கொடுமை அரங்கேறி வருகிறது என்பதுதான் வேதனை.