இப்போ போய் உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? கொரோனா 2வது அலை ஏற்படும் - ஜெயக்குமார்
உதயநிதி ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாமல் ஊர்வலம் செல்வதால் கொரோனா இரண்டாவது அலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் ஊர்வலம் நடத்தினால் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்படும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யார் பின்பற்ற தவறினாலும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கட்டுப்பாடுகளை மீறி உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தால் கொரோனா இரண்டாவது அலை பரவி விடும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை அண்ணா சாலையில் தனியார் கடையை துவங்கி வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தலைக்கவசம் என்பது மிகவும் முக்கியம் ,விபத்து ஏற்படும் நேரங்களில் மனிதர்களின் உயிரை காபத்தில் தலைக்கவசம் அனைவரும் அணிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார் தமிழகத்தில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடத்திய ஊர்வலத்தில் சமூக இடைவெளி,முக கவசம் என்று எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் பேரணி நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
இது போன்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தமிழகத்தில் இரண்டாம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும்,தமிழகத்தில் யார் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இப்போது உள்ள சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா?.. ஏன் மோடி செய்தால் பரவாதா?.. உதயநிதி
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கான பணிகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமாரிடம், அமித்ஷா சந்திப்பில் கூட்டணி குறித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், அமித்ஷா அரசு முறை பயணமாகவே தமிழகம் வருகிறார். இன்று அரசு விழாக்களில் அவர் பங்கேற்கிறார் என்றும் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் கூறினார்.