மது கடைகளை திறக்கலாம் என சொன்ன மத்திய அரசை ஏன் ரஜினிகாந்த் எச்சரிக்கவில்லை? கெளதமன்
சென்னை: மதுபான கடைகளை திறந்த தமிழக அரசை எச்சரித்த நடிகர் ரஜினிகாந்த், அந்த கடைகளை திறக்கலாம் என்று சொன்ன மத்திய அரசை எச்சரிக்காதது ஏன் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் இயக்குநர் வ. கெளதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக வ. கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா என்னும் கொடிய கிருமி கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கொத்துக் கொத்தாக மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிற இந்த சூழலில் மத்திய அரசு அதனை மட்டுப் படுத்துவதற்கான திட்டங்களை கையிலெடுக்காமல் இடைவிடாது தமிழ் நாட்டின் அடிப்படை உரிமைகளையே குறி வைத்து பறித்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதனை தமிழக அரசும் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தமிழர்களை வதைக்க தன் பங்குக்கு எப்படியாவது டாஸ்மாக்கை திறந்துவிடத் துடித்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்நேரத்தில் இதுதான் தோதான நேரமென்று கருதி நடிகர் ரஜினி தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்திட ஆடும் அமெச்சூர் நாடகம்தான் அதனையும் தாண்டிய பெரும் வேதனை. ஆண்டு கொண்டிருக்கிற அதிமுகவாக இருந்தாலும் ஆண்ட திமுகவாக இருந்தாலும் இனி தமிழகத்தை ஆளத்துடிக்கிற எவராக இருந்தாலும் சரி, மதுவை மீண்டும் விற்க முன் வந்தால் மிகக் கடுமையான எதிர் விளைவினை சந்திக்க நேரிடும் என்பது அனைவரும் அறிந்தது. ரஜினியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது வரவேற்கப்படவேண்டியதுதான் என்றாலும் , அதிலுள்ள நுணுக்கமான அரசியல் அபாயகரமானது.
டாஸ்மாக் வழக்குகள்.. மே 14ஆம் தேதி காலை 10:30 மணிக்கு ஹைகோர்டில் முழு அமர்வு முன்பு விசாரணை
மத்திய அரசிடம் அதிருப்தி தெரிவிக்கலாம்
தமிழ்நாட்டின் அமைச்சர்களே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் மதுக்கடைகளை திறந்தோம் என்கிறபோது மத்திய அரசுக்கு நெருக்கமானவராகவும் பிரதமர் மோடியின் நண்பராகவும் இருக்கக்கூடிய ரஜினி இதுவரை மத்திய அரசிடம் ஏன் தனது அதிருப்தியை தெரிவிக்கவில்லை? அனைத்து மாநிலங்களும் கடுமையான ஊரடங்கில் இருக்கும் போதே இந்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரசாத் ஜவடேகர், மாநில அரசுகள் மதுக்கடைகளை திறக்கலாம் என பிரகடனப் படுத்தியபோது தமிழக அரசை எச்சரித்ததை போலவே வருகின்ற தேர்தலில் பா.ஜ.க. விற்கும் மாபெரும் பின்னடைவினை ஏற்படுத்தும் என்று ஏன் எச்சரிக்கவில்லை?
மின்சார சட்டமும் ரஜினியின் மவுனமும்
ஆளும் பா.ஜ.க அரசு நீட் உட்பட தமிழ்நாட்டின் கல்வி உரிமை, காவேரி உரிமை பறிப்பை தொடர்ந்து இப்போது மின்சாரத்திலும் கை வைத்திருக்கிறது. மத்திய அரசு தனக்காகவும் தனக்கு வேண்டிய முதலாளி நண்பர்களுக்காகவும் மின்சாரத்துறையை தன் வசப்படுத்துவதன் மூலம் ஏழைகளும், விவசாயிகளும் மின்சாரத்தை இலவசமாய் பெற முடியாத கட்டாயச் சூழல் உருவாகும். மின்சாரத்தின் விலை பன்மடங்கு உயரும். இதனால் பாதிக்கப்படப்போவது வேளாண்மையை நம்பி இருக்கும் சிறு குறு விவசாயிகளும் கிராமப்புற குடும்பங்களும்தான். இவையனைத்தும் தனது " ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் " தந்த தமிழினத்திற்குத்தான் பெரும் பாதிப்பினை உருவாக்கும் என ரஜினி அவர்களுக்கு தெரியாதா என்ன ?
தமிழகத்துக்கு நிதி கேட்காத ரஜினி
ஓக்கி, தானே, வர்தா எனப் பல புயல்கள் தமிழ்நாட்டையே தலைகீழாக புரட்டி போட்டபோது மத்திய அரசிடம் கெஞ்சி கேட்டும் உரிய நிதியினை கொடுக்காமல், இன்று கொரோனாவிற்காகவும் பலமுறை நிதி கேட்டும் சரிவர கிடைக்காமல் கடுமையான நெருக்கடிகளை தமிழக அரசு சந்தித்து வருவதை அறிந்தும் இதுவரை மௌனித்திருந்த ரஜினி இப்போது மட்டும் ஏன் பேச தொடங்குகிறார்? இங்கு எவரும் சரியில்லை இனி நான்தான் என இவரை இயக்கும் பிக்பாஸ்களால் பேச வைக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவிலேயே மத்திய அரசுக்கு வரிகள் மூலம் அதிக வருமானம் ஈட்டித்தரும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான கோடிகளை தமிழகம் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்க தமிழகத்திற்குத் தேவையான நிதியை உடனடியாக தாருங்கள் என மத்திய அரசிடம் ரஜினி ஏன் கோரிக்கை வைக்கவில்லை?
மத்திய அரசுக்கு அறிவுரை
எங்களை நிரந்தரமாக ஒடுக்க நினைப்பவர்களால் ரஜினி முதன்மையானவராக காட்டப்பட்டு வருகின்ற தேர்தலுக்குள்ளாக தயார்படுத்தப்படுகிறார் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. "தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தருவேன்" என்று தனது படங்களின் மூலம் சபதமெடுத்த ரஜினி, தொடர்ந்து தமிழர்கள் மீதும் தமிழ் மொழி, தமிழ்நாட்டின் உரிமைகள் மீதும் மத்திய அரசு அதிகார போர் தொடுப்பதை ஒருமுறையாவது கண்டித்து விட்டு தமிழ்நாட்டிற்கு அறிவுரை சொல்லட்டும்.
தரையில் நடிப்பது எடுபடாது
திரையில் நடித்த தாங்கள் தரையிலும் நடிப்பது ஒருபோதும் எடுபடாது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று மத்திய அரசின் வலிந்த அத்து மீறல்களை இங்கு ஆளும் அ.தி.மு.க அரசோ அல்லது பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க வோ ஒருபோதும் வேடிக்கை பார்க்கக் கூடாது. ஒருவேளை எல்லாம் பொய்த்துப்போனால் ஜல்லிக்கட்டுக்காக திமிறி எழுந்த எங்கள் அறமிக்க பெரும்கூட்டம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை "தமிழ்ப் பேரரசு கட்சியின்" சார்பாக உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வ. கெளதமன் கூறியுள்ளார்.