இப்பவே கண்ணைக்கட்டுதே... சொந்தங்களால் தொடரும் சோதனை - உறவுகளால் திணறும் சசிகலா
அரசியல் களத்தில் எதிரிகள் குடுக்கும் குடைச்சலை விட சசிகலாவிற்கு சொந்தங்கள் கொடுக்கும் குடைச்சல்தான் அதிகமாக இருக்கிறது. எதை சமாளிப்பது எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்துக்கொண்டிருக்கிறாராம்.
சென்னை: சசிகலா ஜெயிலில் இருந்து வந்தும் எந்த அதிரடியும் காணோமே அமைதியாக இருக்கிறாதே என்னவாம் என்று பலரும் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்க, சொந்தக்காரர்கள் கொடுக்கும் மண்டைக்குடைச்சல் தாங்காமல்தான் தற்போதைக்கு அமைதியாக இருக்கிறாராம். சசிகலா உடன் யார் நெருக்கமாவது என்பதில்தான் இப்போது உறவுகளுக்குள் உரசலாம்.
சசிகலாவிற்கு சொந்தங்கள் அதிகம். அண்ணன் தம்பிகள், அக்காள் மகன்கள், சகோதரர்கள் மகன்கள் என திரும்பிய பக்கமெங்கும் சொந்தங்கள்தான். அந்த சொந்தங்கள் எல்லாம் சேர்ந்துதான் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நன்றாக அனுபவித்து சொத்து சேர்த்து வைத்திருக்கின்றனர்.
இதில் அரசு வசமான சொத்துக்கள் எல்லாம் பாதி கூட இல்லை. பல கோடி ரூபாய் சொத்துக்கள் எங்கே எப்படி யார் வசம் இருக்கிறது என்பது சசிகலா மட்டுமே அறிந்த உண்மை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வந்தாலும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. காரணம் இன்னமும் விடாது கருப்பாக விரட்டும் சொந்த பந்தங்கள்தான்.
சசிகலாவின் சொந்தங்கள்
டிடிவி தினகரன் ஒருபக்கம், அவரது மனைவி அனுராதாவின் சகோதரர் வெங்கடேஷ் மறுபக்கம் இருக்க தினகரனின் தாய் மாமாவும் சசிகலாவின் சகோதரருமான திவாகரனும் அவரது மகன் ஜெய் ஆனந்தும் தனி ஆவர்த்தனம் செய்கின்றனர். இளவரசி குடும்பத்தினரும் தனியாக இன்னொரு பக்கம் காய் நகர்த்தி வருகின்றனர். தனது மைத்துனராக இருந்தாலும் டாக்டர் வெங்கடேசுக்கு சசிகலா முக்கியத்துவம் கொடுப்பது தினகரனுக்கு பொறுக்கவில்லை.
டிடிவி தினகரனின் நகர்வுகள்
சசிகலாவின் அண்ணன் மகனும் இளவரசியின் மகனுமான விவேக், கிருஷ்ணபிரியாவும் சசிகலாவிற்கு நெருக்கமானவர்களாக மாறுவது டிடிவி தினகரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காரணம் ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோவை லீக் செய்த போது அதை எதிர்த்து பிரஸ் மீட் வைத்தவர் இந்த கிருஷ்ண பிரியாதான். எனவேதான் சசிகலாவிடம் அவர்களை நெருங்கவிடாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் டிடிவி தினகரன்.
பதிலடி தரும் இபிஎஸ்
அரசையும் ஆள்பவர்களையும் சீண்டுவதே டிடிவி தினகரனின் வேலையாக இருக்கிறது. அதற்குத்தான் அவ்வப்போது முதல்வர் பழனிச்சாமியும் பதிலடி கொடுத்து வருகிறார். சசிகலா கட்சியிலேயே இல்லை அவரைப்பற்றி பேச ஒன்றும் இல்லை என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறிவிட்டார். ஓ.பன்னீர் செல்வமோ எதைப்பற்றியுமே பேசாமல் சைலண்ட் மோடுக்கு போய் விட்டார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு
சசிகலா அமைதியாக இருக்கிறார் அடுத்து என்ன செய்யப்போகிறார். புயலுக்கு முந்தைய அமைதியாக இருக்குமோ என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கும் போதே 2017ஆம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க கோரி சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சசிகலா முறையீடு செய்துள்ளார் அந்த மனுவை மார்ச் 15ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மண்டைக்குடைச்சல்
தீவிர அரசியலில் ஈடுபடவேண்டும் என்று சசிகலா நினைத்தாலும் அவரைச்சுற்றியுள்ளவர்கள் செய்யும் பஞ்சாயத்தால் மண்டைக்குடைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறாராம் சசிகலா. டிடிவி தினகரன், திவாகரன், இளவரசி குடும்பம் என உறவுகளுக்குள் ஏற்படும் உரசலை சமாளிப்பதே சசிகலாவிற்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறதாம்.
என்ன செய்யப்போகிறார்
ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே இந்த உறவுகளால்தான் சிக்கல் உருவானது. இந்த சொந்தங்கள் செய்த பிரச்சினையால்தான் சசிகலாவின் உறவுகள் அத்தனை பேரையும் ஓரங்கட்டினார் ஜெயலலிதா. போயஸ் கார்டன் பக்கமே யாரையும் வர விடாமல் செய்தார். சசிகலாவினால் அப்படி எதுவும் செய்ய முடியாதே சொந்தங்களை வைத்துதான் அவரது அடுத்த நகர்வே இருக்கிறது. இது யாரை ஒதுக்குவது, யாரை சேர்த்துக்கொள்வது என்பதில்தான் அவரது அடுத்த நகர்வு இருக்கிறது.