எங்கள் வீட்டின் மகாலட்சுமியே.. நீங்கள் எனக்கு மகளாக பிறக்க அருள்புரியுங்கள்.. ஓபிஎஸ் மகன் உருக்கம்
சென்னை: என்னை கருவில் சுமந்து உருவம் கொடுத்து 38 ஆண்டுகள் எனக்கு நிழலாக இருந்த எனது தாயே மீண்டும் ஒரு பிறப்பு எடுத்து என் மகளாக பிறக்க அருள்புரிய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தனது தாய் விஜயலட்சுமியை நினைத்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி கடந்த 1ஆம் தேதி காலமானார். அவரது இறப்பிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடல் பெரியகுளத்தில் இன்று நல்லடக்கம்
தேற்றிய ஸ்டாலின்
அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது ஸ்டாலின் வந்தவுடன் கைகளை பிடித்து கொண்டு ஓபிஎஸ் மனம் உடைந்து அழுதார். அவரை தேற்றிய ஸ்டாலின் இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினார்.
ஜெயபிரதீப் ட்விட்டர்
அது போல் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவிடமும் கதறி அழுதார் ஓபிஎஸ். இத்தனை ஆண்டுகளாக தனது வளர்ச்சியில் உறுதுணையாக இருந்த மனைவி தற்போது இல்லையே என்ற ஏக்கம் அவரையும் அவரது குடும்பத்தையும் விட்டு அகலவே இல்லை. இதற்கு அவரது மகன் ஜெயபிரதீப் ட்விட்டரில் தாயை நினைத்து எழுதிய கருத்துகளே சாட்சி.
ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்
இதுகுறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தனது வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை பிறந்த வீட்டிற்கும் இரு பகுதியை புகுந்த வீட்டிற்கும் அர்ப்பணித்து உங்களின் தாய் தந்தைக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் எனது தந்தைக்கு, எனக்கும் என் உடன் பிறந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் சுற்றத்தாருக்கும் பொதுமக்களுக்கும் ஒரு ஆலமரமாக எங்களுக்கெல்லாம் நிழலாக, உற்ற துணையாக ஆறுதலாக இருந்தீர்கள்.
வீட்டின் மகாலட்சுமி
தங்களின் பெயர் விஜயலட்சுமி என்றாலும் அனைவரும் வீட்டின் மகாலட்சுமி என அன்போடு கூறுவார்களே. தற்போது எங்களை விட்டு பிரிந்து இயற்கையோடு இறைவனிடம் சேர்ந்து விட்டீர்களே அம்மா. பூமியில் நான் வருவதற்கு உயிர் தந்து, கருவில் சுமந்து, உருவம் கொடுத்து, இந்த 38 ஆண்டுகள் எனக்கு நிழலாக இருந்து, என்னை மனிதனாக உருவாக்கிய எனது தாயே மீண்டும் ஒரு பிறப்பு எடுத்து, என் வழித்தோன்றலின் மகளாக பிறந்து, நான் பிறவிக் கடனை அடைப்பதற்கு அருள்புரிய வேண்டும் என் தெய்வமே, அன்பு மகன் வி.ப. ஜெயதீப்.