குழந்தைகளுக்கான தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்: தொழில்நுட்ப தேசிய ஆலோசனைக்குழு இன்று முக்கிய முடிவு
ஒமிக்ரான் பரவலை அடுத்து 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து ஆராய இன்று தொழில்நுட்ப தேசிய ஆலோசனைக்குழு கூடி முடிவெடுக்கிறது.
ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னேற்பாடாக பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் தடுப்பூசிக்கான தேசிய நோய்பரவல் தடுப்பு வல்லுனர் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளது.
இரண்டாவது அலை
கொரோனா வைரஸ் முதல் அலை வேகமாக பரவிய நிலையில் தடுப்பூசியின் அவசியம் குறித்து ஆய்வுப்பணி முடுக்கிவிடப்பட்டது. தடுப்பூசி பணி தொடங்கிய சில மாதங்களில் இரண்டாவது அலை கடந்த ஆண்டு இறுதியில் அதிகரித்து ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட்டது.
ஓமிக்ரான் பரவல் அச்சம்
நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை ஓய்ந்துவிட்ட நிலையில், புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 21 ஐ கடந்துள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவிவிட்டது.
40 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர், குழந்தைகளுக்கான தடுப்பூசி
ஓமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என்ற மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமான அளவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதையும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்தியாவிலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதை தொடங்கலாமா என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவசரமாக கூடும் ஆலோசனைக்குழு
தற்போதுள்ள சூழ்நிலையில் மேற்கண்ட இரு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று அவசரமாக கூடுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத்தில் வெளியான தகவலில் " கொரோனாவுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு டிச.6 அன்று கூடுகிறது. இந்த குழுவினர் பூஸ்டர் தடுப்பூசி, கூடுதல் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் முடிவு எடுப்பார்கள்.
இதில் கூடுதல் தடுப்பூசிக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் வேறுபாடு இருக்கிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது, இருடோஸ் தடுப்பூசி செலுத்தியபின் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் செலுத்திக்கொள்வது.
பூஸ்டர் டோஸ், கூடுதல் டோஸ் வித்தியாசம்
ஆனால், கூடுதல்டோஸ் (அடிஷனல் டோஸ்) என்பது, ஒருவர் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்பான பிரச்சினை இருப்போருக்கு வழங்கப்படுவது கூடுதல் டோஸ் . தடுப்பூசியாகும். போதுமான அளவு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க முடியாத நிலையில், நோய் எதிர்ப்புச்சக்தியின் அளவை அதிகரிக்க இந்த டோஸ் வழங்கப்படுகிறது. ஒமிக்ரானால் இந்தியாவில் 21 பேர் பாதிக்கப்பட்டதால் இந்த திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சுகாதாரத்துறை அமைச்சர் பதில்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் மக்களவையில் அளித்த பதிலில் " தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, நோய்ப்பரவல் தடுப்பு நிர்வாக தேசிய வல்லுநர்கள் குழு இணைந்து பூஸ்டர் டோஸ் குறித்து அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்" எனத் தெரிவிதுள்ளார்.