விடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு!
Recommended Video
சென்னை: இந்த எலக்ஷனுக்கு அப்புறம் எல்லாருக்கும் ஒரு விடிவு காலம் வரணும். மக்கள் எல்லாரும் ஆரோக்கியமா, சவுக்கியமா இருக்கணும், கண்ணீர் சிந்தாம இருக்கணும்" என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடிகளில் நடிகர் வடிவேலு வாக்களிக்க காவேரி உயர்நிலை பள்ளியில் வந்தார். அப்போது அவர் ஓட்டு போடுவதை அங்கிருந்தவர்கள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
ஓட்டு போட்டு முடித்தவுடன் வடிவேலு அங்கிருந்தே கையை ஆட்டினார். பிறகு பூத்துக்குள் இருந்தே எட்டி எட்டி குதித்தார். (இப்படியெல்லாம் சாவடிக்குள் செய்யலாமா என தெரியவில்லை) பார்ப்பதற்கு டான்ஸ் ஆடுவது போலவே இருந்தது. ஓட்டு போட்டு முடித்ததும் கூலிங்கிளாஸ் எடுத்து போட்டு கொண்டார்.
கடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு
யோசிச்சுப் போடுங்க
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது: "இன்னைக்கு தேர்தல் என்பது திருவிழாவுக்கு சமம். மக்கள் நல்லா யோசிச்சு, ஒரு தடவைக்கு 10 தடவை சிந்திச்சு போடுங்கன்னு அப்டின்னு சொல்ற நேரம் இது கிடையாது. ஏன்னா டைம் முடிஞ்சிடுச்சு.
தெளிவாக இருக்கு ஜனம்
நான் பூத் மூடும்போது வரலாம்னு இருந்தேன். ஆனா அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன். மக்களுக்கு நாம சொல்ல வேண்டியதே கிடையாது. ஜனங்க. ரொம்ப அழகா, தெளிவா இருக்காங்க. இன்னைக்கு இருக்கிற இளைஞர்கள் கையில பூராம் செல்போன் இருக்கு.
எதிலாவது குத்துவோம் கருமம்
நம்ம ஆத்தா, அப்பன், பாட்டன், பூட்டன், போய் போட்டுட்டு வந்துடுவோமா.. வாங்க எதிலாச்சியாச்சும் போய் குத்திட்டு வந்துடுவோம், எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்'ன்னு போட்டுட்டு வருவாங்க. இப்போ அப்படி இல்லை.. உலகம் உள்ளங்கைக்கு வந்துருச்சு. ஒவ்வொரு புள்ளை கையிலும் வாட்ஸ்அப் இருக்கு. யாருக்கிட்டயும் கேட்டு ஓட்டு போடணும்னு அவசியம் இல்லை.
விடிவு காலம் வரட்டும்
இளைஞர்களே வீட்டில் அவங்கவங்க அம்மா, அப்பாவுக்கு எடுத்து சொல்றாங்க. அவ்ளோ தெளிவா இருக்காங்க. இந்த எலக்ஷனே ஒரு வித்தியாசமான எலக்ஷன். அநேகமாக இந்த எலக்ஷன் முடிந்த உடனேயே கடுமையான மழை பெய்யும்னு நினைக்கறேன். ஏன்னா இந்த எலக்ஷனுக்கு அப்புறம் எல்லாருக்கும் ஒரு விடிவு காலம் வரணும். எல்லாரும் நல்லா இருக்கணும்.
நல்லா இருக்கணும்
நான் எந்த அரசியல் கட்சியையும் சொல்லலல. ஆனா மக்கள் எல்லாரும் ஆரோக்கியமா, சவுக்கியமா இருக்கணும், கண்ணீர் சிந்தாம இருக்கணும். ஏன் இங்க இருக்கிற பத்திரிகையாளர்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்" என்றார்.
அதான் சொல்லிட்டேனே
இதையடுத்து செய்தியாளர்கள், ஜெயலலிதா, கருணாநிதி இரு பிம்பங்களும் இல்லாத இந்த தேர்தலை எப்படி பார்க்கறீங்க என்று கேட்டனர். அதற்கு வடிவேலு, "அதைத்தானே இவ்ளோ நேரம் சொல்லியாச்சு.. மறுபடியும் முதல்ல இருந்தா வரட்டா" என்றார்.
படம் முடிஞ்சாச்சு போங்கய்யா
திரும்பவும் செய்தியாளர்கள், "போன முறை பிரச்சாரம் செய்தீங்க. இந்த முறை இல்லையே?" என்று கேட்டனர். அதற்கு வடிவேலு, "ஏன்.. நான் பேசாமல் இருக்கிறது பிடிக்கலையா? அதெல்லாம் இப்போ எதுக்கு? படம் முடிஞ்சி போச்சுய்யா.. வணக்கம் போட போறாங்க இப்போ." என்று பதிலளித்தார்.