9 வருடங்கள் கழித்து.. அரசியலில் வாய்ஸ் கொடுத்த வடிவேல்.. மீண்டும் வந்தார்.. திமுக பயன்படுத்துமா?
நடிகர் வடிவேல் கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து அரசியல் தொடர்பாக பேசி இருக்கிறார்.
சென்னை: நடிகர் வடிவேல் கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து அரசியல் தொடர்பாக பேசி இருக்கிறார். இதனால் தமிழகத்தில் மீண்டும் வடிவேல் கவனம் பெற தொடங்கி உள்ளார்.
Recommended Video
நடிகர் வடிவேல், இணைய உலகில் கடந்த 15 வருடங்களாக இவர்தான் சூப்பர் ஸ்டார். படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் வடிவேல் இல்லாத இன்டர்நெட் தமிழகத்தில் கிடையாது. மீம் உலகில் இப்போதும் வடிவேல்தான் காமெடி கிங்.
நேசமணி தொடங்கி வண்டுமுருகன் வரை வடிவேலின் கதாபாத்திரங்கள்தான் இப்போதும் தமிழக காமெடி உலகை ஆண்டு வருகிறது. ஒவ்வொரு புதிய பாடல், படத்தின் ட்ரைலர் வரும் போதெல்லாம் கூடவே வடிவேல் வர்ஷன் ஒன்றும் வெளியாகும் அளவிற்கு வடிவேல் தமிழக மக்களுடன் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது.. நமக்கும் தெரியாது.. வடிவேல் செம கிண்டல்!
வடிவேல் எப்படி
2011ல் வடிவேல் தமிழக சினிமா உலகில் டாப்பில் இருந்தார். அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்தது. ஒரு படம் விடாமல் எல்லா படங்களுக்கும் வடிவேல் காமெடி பெரிய வரவேற்பை பெற்றது., வடிவேலுக்காக மட்டும் ஹிட் ஆன பல மொக்கை படங்கள் இருக்கிறது. வடிவேல் காமெடி, பல இடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. அப்படிப்பட்ட நேரத்தில் வடிவேல் எடுத்த தவறான முடிவுதான் அரசியல் தேர்தல் பிரச்சாரம்.
சட்டசபை தேர்தல்
2011 சட்டசபை தேர்தலில் திமுகவின் ஸ்டார் பேச்சாளராக வடிவேல் களமிறங்கி இருந்தார். ஈழ பிரச்சனை, 2ஜி பிரச்சனை என்று திமுக மீது கடுமையான விமர்சனங்கள் இருந்த நேரம் அது. அதிமுக - தேமுதிக எதிர் தரப்பில் வலிமையான கூட்டணியும் வைத்து இருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடனான சண்டை காரணமாக, தேமுதிகவை எதிர்த்து திமுகவிற்கு தீவிரமாக பிரச்சாரம் செய்தார் வடிவேல்.
அரசியல் என்ன ஆனது
இவரின் பிரச்சாரத்தை பார்க்கவே பல பொதுக்கூட்டங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. விஜயகாந்த்தை மட்டும் கிண்டல் செய்த வடிவேல், கவனமாக அதிமுகவை தவிர்த்து வந்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபின்,
வடிவேல் மார்க்கெட் மொத்தமாக சிக்கலுக்கு உள்ளானது. வடிவேலை வைத்து படம் எடுத்தால் , அது வெளியாகுமா என்ற நிலை உருவானது. அவரின் அரசியல் பிரச்சாரம் சினிமா வாழ்க்கையில் பெரிய சிக்கலை கொண்டு வந்தது.
என்ன சிக்கல்
மொத்தமாக வடிவேலுக்கு படங்கள் வருவது குறைந்து போனது. சினிமாவில் இருந்து விலகியவர் அப்படியே தன்னை அரசியலில் இருந்தும் தூரமாக வைத்துக் கொண்டார். பெரிதாக இரண்டிலும் ஆர்வம் காட்டவில்லை. அதன்பின் வடிவேல் ஹீரோவாக நடித்த சில படங்களும், மெர்சல் போல காமெடியனாக நடித்த சில படங்களும் வெளியானது. ஆனால் இதெல்லாம் வடிவேலுக்கு பெரிய பிரேக் கொடுக்கவில்லை.
இப்போது என்ன
இந்த நிலையில் இத்தனை நாட்கள் அரசியல் குறித்து பேசாமல் இருந்த வடிவேல் மீண்டும் அரசியல் குறித்து பேச தொடங்கி இருக்கிறார். நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய வடிவேல், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது. ஆட்சிக்கு ஒரு தலைவர் என்ற அவரின் முடிவை வரவேற்கிறேன். என் திட்டப்படி 2021ல் நான்தான் முதல்வர், கண்டிப்பாக இது நடக்கும், நானும் சிஎம் வேட்பாளர்தான் என்று நடிகர் வடிவேல் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
ஆனால்
வடிவேல் கண்டிப்பாக தேர்தலில் நிற்க வாய்ப்பில்லை. ஆனால் வடிவேல் மீண்டும் பிரச்சார மேடைக்கு திரும்புவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. திமுகவில் தற்போது பெரிய அளவில் ஸ்டார் பேச்சாளர்கள் இல்லை. தற்போது ஸ்டாலினை தவிர்த்து உதயநிதி ஸ்டாலின் மட்டும்தான் பிரச்சாரம் செய்கிறார். நடிகர்கள், நடிகைகள் பலர் அதிமுக அணிக்கும், பாஜகவிற்கு சென்றும் விட்டார்கள். இதனால் திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய அரசியல் இல்லாத ஒரு முகம் தேவை.
மீண்டும் வடிவேல்
வடிவேலுக்கு அப்போது இருந்த மவுஸ் இப்போதும் இருக்கிறது. அவர் மேடையில் வந்து பேசினால் பார்க்க பலர் கூடுவார்கள். திமுக இவரை மீண்டும் தன் பக்கம் இழுத்து வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஏற்றபடியே தற்போது வடிவேலும் அரசியல் கருத்து கூறியுள்ளார். அதிலும் முக்கியமாக ரஜினியையும் வடிவேல் கிண்டல் செய்துள்ளார். 2021 தேர்தலில் ரஜினியின் கட்சி போட்டியிட்டால் (ஒருவேளை போட்டியிட்டால்) அவரை சமாளிக்க வடிவேல் சிறந்த ஆப்ஷனாக இருக்க வாய்ப்புள்ளது.