பிக்பாஸில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமலுக்கு கிடைக்காது.. வைகைச் செல்வன்
சென்னை: பிக்பாஸில் பங்கு பெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமலஹாசனுக்கு கிடைக்காது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சனம் செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.
வாக்காளர்கள்
அப்போது அவர் பேசியதாவது: வாடகை பாக்கி வைத்திருந்த ரஜினிகாந்த் இறுதியில் என்னிடம் வாடகை கேட்காதீர்கள். நான் அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். டிடிவி தினகரன் உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபராவார்.
டார்ச்லைட்
இதில் அதிமுகவும் அமுமுகவும் ஒன்றிணையுமா? என்று பொய் பிரச்சாரம் செய்கிறார். கமல்ஹாசன் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது. ஏனெனில் ரம்யா பாண்டியனுக்கு நானே 5 ஓட்டுக்கள் போட்டு உள்ளேன்.
நல்ல பெண்
ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு அழகாகவும் நல்ல பெண்ணாகவும் இருப்பதனால் பிழைத்துப் போகட்டும் என ஐந்து ஓட்டுகள் போட்டேன். மூன்று கோடி நான்கு கோடி ஓட்டுகள் விழுவதற்கு அரசியல் களம் பிக்பாஸ் அல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
விமர்சனம்
கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தில் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து பேசி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.