கோவிந்தா , கோவிந்தா... வைகுண்டம் வரை கேட்ட பக்தர்கள் கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
சென்னை: கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும்.
பின்னர் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளன்று பெருமாள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் அந்த வழியாக கோயிலை சுற்றி வருவார்.
|
மக்கள்
இதன்பின்னர் பகவான் வந்த சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதையொட்டி மேற்கண்ட முக்கிய கோயில்களில் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த மக்களும் கூடுவர்.
பாதுகாப்பு
அதன்படி திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கினர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
பெருமாள்
கோவை காரமடை ரங்கநாதர், புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்களில் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
234 அடி மாலை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா, பரமபத வாசல் இன்று திறப்பதை முன்னிட்டு பக்தர் ஒருவர் இராஜகோபுரத்திற்கு சாதனை அளவாக 234 அடி உயரத்தில் மாலை சாத்தினார்.