திருமண விழாவில் மணமகன் நண்பருக்கு பளார் விட்ட வைகோ.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
Recommended Video
சென்னை: ஆண்டிபட்டியில் திருமண விழாவில் கலந்துகொணட வைகோ, மணமகனின் நண்பர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கார் ஓட்டுநர் பொன்னாங்கன் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த வைகோ, தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
தாலி கட்டும் வேளையில் மணமகனின் நண்பர்கள் மேடையில் விசில் அடித்தும், ஸ்பிரே அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த ஸ்பிரே, வைகோ மீது படவே அவர் சட்டென கோபமடைந்தார்.
எதிரே இருந்த மணமகனின் நண்பர் கையில் இருந்த வண்ண காகித வெடி டப்பாவை பிடுங்கி, அவரை கடுமையாக தாக்கினார் வைகோ. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், வைகோவை தடுத்து சமாதானம் செய்தனர்.
அப்போதும் கோபம் குறையாத அவர், மேடையில் நின்றிருந்த மணமகனின் நண்பர்களை திட்டினார். தொடர்ந்து மணமகனின் நண்பர்கள் மேடையை விட்டு கீழிறங்கினர். இச்சம்பவம், திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தது.
"தனது நண்பனின் திருமணத்தை கொண்டாடவே அப்படி செய்தனர். அவர்களை அழைத்து அறிவுரை கூறியிருக்கலாம். தாக்குவது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.!" என்றனர் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள்.