வைகோ ஒரு நம்பர் 1 துரோகி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் கடும் விமர்சனம்.. முற்றும் மோதல்!
காங்கிரஸ் கூட்டணிக்கு துரோகம் செய்யும் மதிமுக எம்பி வைகோ ஒரு நம்பர் ஒன் துரோகி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கூட்டணிக்கு துரோகம் செய்யும் மதிமுக எம்பி வைகோ ஒரு நம்பர் ஒன் துரோகி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு தற்போது காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
மதிமுக எம்பி வைகோ விசுவாசமற்றவர், அரசியல் நாகரீகமற்றவர் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பரபரப்பு விமர்சனம் வைத்துள்ளார். தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் வைகோவை விமர்சனம் செய்துள்ளார்.
என்ன பேட்டி
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பேட்டியில், மதிமுக எம்பி வைகோ பாஜகவை விமர்சனம் செய்யாமல், காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் தயவில்தான் வைகோ எம்பி ஆனார். வைகோ கொஞ்சம் நன்றியோடு இருக்க வேண்டும். நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் அவரால் எம்பி ஆகி இருக்க முடியாது.
ஆனால் என்ன
ஆனால் அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு வைகோ துரோகம் செய்கிறார். அமித் ஷா பேச்சை கேட்டு வைகோ பேசி வருகிறார். அமித் ஷா காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ய சொன்னபடியே வைகோ செய்துள்ளார்.
தயவு இல்லை
எங்கள் தயவில் எம்பி ஆகிவிட்டு இப்போது எங்களுக்கு எதிராகவே பேசுகிறார்கள். வைகோவின் செயல் கண்டிக்கத்தக்கது. கூட்டணிக்கு எதிராக பேசி வரும் வைகோ ஒரு நம்பர்.1 துரோகி., என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள்
தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்கள் வைகோவை விமர்சனம் செய்வதும், அதற்கு மதிமுகவின் முக்கிய உறுப்பினர்கள் பதிலடி கொடுப்பதும் தமிழக அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.