வைகோ உண்மையை பேசுவார்.. அவர் மீது மரியாதை உள்ளது.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ராஜேந்திரபாலாஜி
மதிமுக எம்பி வைகோ மீது மிகுந்த மரியாதை உள்ளது, அவர் உண்மையை பேச கூடிய நபர் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: மதிமுக எம்பி வைகோ மீது மிகுந்த மரியாதை உள்ளது, அவர் உண்மையை பேச கூடிய நபர் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
வைகோ தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பதிலடியாக வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருவரும் விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து புதிய திருப்பமாக தற்போது அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
பேசினார்?
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, திமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. வேலூர் தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டுகிறது. வேலூரில் திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி கிடையாது. அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
உண்மை என்ன
திமுகவின் உண்மை முகம் மக்களுக்கு தெரிந்துவிட்டது அதனால் வேலூரில் சிறுபான்மையினர் வாக்குகளை திமுக கட்சியால் வாங்க முடியவில்லை. ஆனால் நாங்கள் அதே வேலூரில் நல்ல அளவில் வாக்குகளை வாங்கி இருக்கிறோம். மக்கள் அதிமுக பக்கம் வர தொடங்கி உள்ளனர்.
வைகோ எப்படி
வைகோ காங்கிரஸ் குறித்து பேசியது உண்மைதான். வைகோ மீது அதிமுகவினருக்கும் தொண்டர்களுக்கும் பெரிய மரியாதை இருக்கிறது. அவர் எப்போதும் உண்மையை பேச கூடியவர். யாரும் அவரை பின்பக்கம் இருந்து இயக்க முடியாது. அவர் மனதில் தோன்றியதை பேசுவார்.
அப்படித்தான் பேசினார்
அப்படித்தான் காங்கிரஸ் குறித்து பேசினார். ஈழம் குறித்து முதல்முறை தேசிய அளவில் பேசிய ஒரே தலைவர் அவர்தான். பல நேரங்களில் அவர் தன்னை மறந்து உண்மையை பேசி விடுகிறார். அப்படித்தான் அவர் காஷ்மீர் பிரச்சனை குறித்தும் பேசினார்., என்று ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
முன் எப்படி
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கும் மதிமுகவிற்கு கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் வாய் தகராறு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வைகோவை அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி பாராட்டி இருக்கிறார். இதன் மூலம் அதிமுகவிற்கு மதிமுகவை ராஜேந்திர பாலாஜி இழுக்க பார்க்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.