மு.க.ஸ்டாலினுடன் வைகோ, காதர் மொஹைதீன் சந்திப்பு.. கூட்டணி குறித்து பேச்சு?
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் ஆகியோர் இன்று மாலை சந்தித்துப் பேசினர்.
மதுரை ஒத்தக்கடையில் வருகிற 16ம் தேதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் நேரில் கொடுத்து மாநாட்டில் சிறப்புரையாற்ற காதர் மொஹைதீன் அழைப்பு விடுத்தார்.
சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம். இது மகிழ்ச்சி தருகிறது. மாநாட்டின் நிறைவு உரை நிகழ்த்தவுள்ளார் மு.க.ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
இதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இந்த இரு தலைவர்களின் சந்திப்பின்போதும் கூட்டணி தொடர்பாகவும் தொகுதிப் பங்கீடு குறித்தும் முக்கியமாக பேசப்பட்டிருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்த இறுதி நிலை இன்னும் தெளிவாகவில்லை. மதிமுக இருக்கிறதா என்பதிலும் குழப்பம் நிலவி வந்தது. ஆனால் வைகோ இன்று வந்து சந்தித்திருப்பதன் மூலம் மதிமுகவும் கூட்டணியில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பகிரங்கமாக இல்லாமல், ரகசியமாக கூட்டணியை வலுப்படுத்தும் வேலையில் திமுக இறங்கியுள்ளது. மேலும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வைகோ, காதர் மொஹைதீன் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடந்தேறியுள்ளது.