தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ.. தீர்ப்பைத் திருத்திய நீதிபதி
சென்னை: தேசதுரோக வழக்கில் இன்று வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை பார்த்ததும் வைகோ கடும் கோபமடைந்தார். இதனால் நீதிபதி தீர்ப்பை திருத்தி வழங்கினார்.
2009 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில், 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் குறித்து பல்வேறு மனுக்களை அப்போதிருந்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வைகோ அளித்திருந்தார். அந்த மனுக்களை தொகுத்து நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்ததக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார், என்று அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யபப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள எம்.பி,. எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மதிமுகவினரும், வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் காத்திருந்தனர். காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த வைகோ நீதிபதியின் வருகைக்காக காத்திருந்தார். பின்னர் நீதிபதி வந்ததும் மூன்றாவது வழக்காக வைகோவின் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உங்கள் மீதான குற்றசாட்டு நிருபிக்கப் பட்டுள்ளது என்ன கூற விரும்புகிறீர்கள் என்று நீதிபதி கேட்டதும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ இப்போதே கொடுத்துவிங்கள்" என்று வைகோ கூறினார். இதன் பின்னர் நீதிபதி "ஒருவருடம் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது" என்று தண்டனையை மட்டும் வாசித்துவிட்டு தீர்ப்பின் நகலை வைகோவின் வழக்கறிஞர்களிடம் கொடுத்தார்.
தீர்ப்பின் நகலை படித்து பார்த்த வைகோவின் வழக்கறிஞர் தேவதாஸ், வைகோவிடம் தீர்ப்பின் ஒரு சில வரிகளை சுட்டிக் காண்பித்தார். இதை படித்ததும் வைகோவின் முகம் மாறியது. பின்னர் நீதிபதியிடம் பேசிய வைகோ நாங்கள் எந்த இடத்திலும் எனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கும்படி உங்களிடம் ஒரு நாளும் கோரிக்கை வைக்கவில்லையே... வாதாடவில்லையே.. ஆனால் தீர்ப்பில் நான் குறைந்த பட்ச தண்டனை கேட்டதாக குறிப்பிட்டுள்ளீர்களே...? இது நீதிபதியின் எண்ணத்தில் இருக்கும் விஷத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது' என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி சில ஆவணங்களை படித்து பார்த்துவிட்டு உடனடியாக தீர்ப்பை திருத்தி வைகோ சுட்டிக்காட்டிய வாசகங்களை அடித்து விட்டு தீர்ப்பு நகலை பணியாளர்களிடம் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வைகோவின் வழக்கறிஞர் தேவதாசிடம் "ஒன் இந்தியா தமிழுக்காக" பேசினோம் அப்போது நம்மிடம் கூறிய அவர் பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு குறைந்த பட்ச தண்டனையை கோருவார்கள் ஆனால் வைகோ அப்படிப்பட்ட எந்த கோரிக்கையையும் நீதிமன்றத்தில் வைக்கவில்லை. ஆனால் தீர்ப்பில் அப்படிப்பட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்ததும் அவர் கோபமடைந்தார். இதன் பிறகு நீதிபதி வேறு தீர்ப்பு தரட்டுமா என்று கேட்டார். ஆனால் நான் இந்த தீர்ப்பிலேயே திருத்தி கொடுங்கள் என்று கேட்டேன் அதன்படி அந்த தீர்ப்பிலேயே நீதிபதி திருத்தம் செய்து கொடுத்தார் என்று வழக்கறிஞர் தேவதாஸ் நம்மிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பொடா சட்டத்தில் வைகோ ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டபோது ஜாமீனுக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.