அட வேற ஒன்னுமில்ல.. இதுக்காகத்தான் நிர்மலா சீதாராமனை சந்தித்தாராம் வைகோ
சகோதரி நிர்மலா சீதாராமன் மனித நேய மிக்கவர் என்று வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை... மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இப்போது மானாவாரியாக புகழ்ந்து தள்ளி உள்ளார்.
நேற்று மீடியாவில் ஒரு போட்டோ வைரலானது. நிர்மலா சீதாராமனை தேடி சென்று வைகோ சந்தித்து பேசியபோது எடுத்த போட்டோதான் அது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் டெல்லி போன வைகோ, நிர்மலா சீதாராமனின் அலுவலகத்தில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார். பாஜகவுக்கு ஆகாத முதல் நபர் என்ற பெயரும் வைகோவுக்கு கிடைத்து வருகிறது. இதற்கு இதுவரை, இனிமேல் நடத்த போகும் கருப்பு கொடி போராட்டமே அதற்கு சாட்சி.
முன்னாள் எம்பி
ஆனால் மற்றொரு பக்கம், திமுக கூட்டணியில் அவரது நிலைப்பாடு என்ன என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் இப்படி ஒரு சந்திப்பு நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டோவை நிர்மலா சீதாராமன் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதுடன், "முன்னாள் எம்பி வைகோ" என்று பதிவிட்டிருந்தார்.
ஏன் சந்தித்தார்?
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மத்திய அமைச்சரை வைகோ சந்தித்தது பெரிய பரபரப்பான விஷயமாகி விட்டது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எதற்கான இந்த சந்திப்பு என்பதை வெளிப்படையாக சொல்லி உள்ளார். அப்போது நிர்மலா சீதாராமனை அளவுக்கு அதிகமாகவே புகழ்ந்து பேசினார்.
மனித நேய மிக்கவர்
"நட்பு ரீதியாக மத்திய அமைச்சர்கள் பலர் என்னுடன் பல காலம் பழகியவர்கள். அதே போல் தான் சகோதரி நிர்மலா சீதாராமனும். மனித நேயம் மிக்கவர் என்பதை எத்தனையோ சம்பவங்களில் உணர்ந்திருக்கிறேன்.
உண்மையான கருத்து
எங்க கிராமத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் அசாமில் இறந்துவிட்டார். அப்போது அதுபற்றி தகவல் சொன்னேன். அந்த நேரத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் சீனாவில் இருந்தபோதும், அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்து, எங்கள் ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார். இப்போ கூட கஜா புயல் பற்றி அவர் மட்டும்தான் உண்மையான கருத்தை சொன்னவர்.
பட்டாசு தொழிற்சாலை
இப்போது பிரச்சனை என்னவென்றால், பட்டாசு தொழிற்சாலைகளை மூடி 8 லட்சம் தொழிலாளர்கள் நடுத்தெருவில் தள்ளப்படும் அளவுக்கு ஒரு பெரிய துன்பத்தில் சிக்கி உள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அவரை நேரில் சந்தித்தேன். பட்டாசு உரிமையாளர் சங்க நிர்வாகிகளும் என்னுடன் வந்திருந்தார்கள்.
முற்றுப்புள்ளி
அப்பிரதிநிதிகளை பிரதம அமைச்சக அதிகாரிகளிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதனால்தான் நான் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தேன்" என்று விளக்கமாக கூறி நிலவி வரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வைகோ.