வைகோ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைப்பு..மருத்துவர்களின் கண்டிப்பு எதிரொலி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அனைத்து நிகழ்ச்சிகளும் இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மதிமுக தலைமைக்கழகமான தாயகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை நிறைவு பெற்று வீடு திரும்பியுள்ள சூழலில், மருத்துவர்கள் இரண்டு வார காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு.. வைகோ விடுதலை.. எம்.பி பதவிக்கு ஆபத்து இல்லை!
அதனால், நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் எழுத்தாளர் சு.வெங்கடேசன், எம்.பி., அவர்களுக்கு செப்டம்பர் 7-ஆம் நாள் சென்னை, எழும்பூர், சிராஜ் மஹாலில் நடைபெற இருந்த இயற்றமிழ் வித்தகர் விருது வழங்கும் நிகழ்ச்சியும், செப்டம்பர் 10-ஆம் நாள் அன்று கலிங்கப்பட்டி ஊர்ப் பொதுமக்கள் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியும் ஒத்தி வைக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
செப்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்தநாள் விழா மாநாடு சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.