வைகோ இப்படி பேசலாமா.. மதிமுகவினர் இப்படி நடக்கலாமா.. நிதானம் அவசியம் இல்லையா?
Recommended Video
சென்னை: என்ன இருந்தாலும் வைகோ இப்படி செய்யலாமா? என்றுதான் இன்றைய தமிழக மக்களின் குமுறலாக உள்ளது.
வைகோ ஒரு சிறந்த அரசியல்வாதி, நாடாளுமன்றவாதி, அரசியல்வாதிகளிடையே அறிவுப் பூர்வமாக பேசுகிற அறிவாளி.
சிறந்த பேச்சாளர், சமூக அக்கறை நிறைந்தவர், மக்களையும் மண்ணையும் பாதிக்கிற எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவற்றை எதிர்த்து மற்ற வேறெந்த தலைவர்களையும்விட உரத்து குரல் கொடுத்து போராடுபவர் வைகோதான் என்றால் அது மிகையல்ல. அதை மறுப்பதற்கும் இல்லை.
யார் தந்த உரிமை?
ஆனால், நேற்றைய திருப்பூர் பொதுக்கூட்டத்தில் அவர் நடந்து கொண்ட முறை சரிதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எந்த தனிமனித பிரஜைக்குமே போராடும் உரிமை உள்ளது. அதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் எதிர்ப்பது நியாயமே. ஆனால் ஒரு பெண்ணை தாறுமாறாக, வகைதொகை இல்லாமல் அடிக்கும் உரிமையை மதிமுகவினருக்கு யார் தந்தது?
அடிக்கலாமா?
கருப்பு கொடி என்பது மதிமுகவின் போராட்டம் என்றால், காலணியை தூக்கி வீசுவதும் ஒருவகையில் எதிர்ப்பு போராட்டம்தான். அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ் மீதும் கூட ஷூ வீசப்பட்டதே. எங்கெங்கும் இது நடக்கிறது. அதற்காக இயற்கையிலேயே உடலளவில் பலவீனமான பெண்ணை பலம் கொண்ட ஆண்கள் அடித்து சாய்ப்பதா?
பேச்சு சரிதானா?
காவல்துறை என்பவர்கள் பொதுவானவர்கள். நாளைக்கு மதிமுகவே அனுமதி வாங்கி கொண்டு ஒரு போராட்டம் நடத்துகிறது என்றால் அங்கு நின்று காவல் காப்பவர்கள் போலீஸ்தான். ஆனால் அவர்களை வரம்பு மீறி பேசியது சரிதானா? வைகோ போலீசை பார்த்து பேசுகிறார், "இந்த வேனுக்குள் எந்த போலீசையும் ஏற விட்டுடாதே. உன் உயிரே போனாலும் ஏற விட்டுறாத, எவனாவது போலீஸ்காரன் உள்ளே நுழைஞ்சான்... நீ செத்தா தான் உள்ளே நுழையணும்.
ரத்தக்களறி ஆயிடும்
போலீஸ் எவனாவது உள்ளே நுழைந்தா உன் பொணத்து மேலதான் உள்ளே நுழையணும்.பெண் போலீஸ் அதிகாரியை கேட்கிறேன், சுடறியா? என்னை சுடு பார்ப்போம்... எனக்கு எப்படி போராட்டம் நடத்தணும்னு தெரியும். காவல்துறை மரியாதையா எங்ககிட்ட வராம போகணும். இல்லேன்னா ரத்தகளறி ஏற்பட்டுடும்.. சொல்லிப்புட்டேன்.. நீ அடிச்சேன்னா உன் லத்திக்கம்பை புடுங்குவோம்" இப்படி பேசியிருக்கிறார். இங்கில்லை, வைகோ சமீப காலமாகவே காவல்துறையினரை பொது வெளியில் ஒருமையில் விமர்சிப்பது அதிகரித்து விட்டது.
கருணாநிதி, ஜெயலலிதா
எச்.ராஜா நடு ரோட்டில் நின்று தரக்குறைவாக பேசியதற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. மூத்த தலைவர், அதுவும் ஒரு மூத்த வழக்கறிஞர், அவரே இப்படி கோபம் காட்டிப் பேசுவது சரிதானா. எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இப்படி பொது இடத்தில் மரியாதை இல்லாமல் பேசியதை நாம் கேள்விப்பட்டிருப்போமா? "செத்தாதான் போலீசை உள்ளே விடணும்" என்று மதிப்பு வைத்திருக்கும் ஒரு தொண்டனை இப்படி உசுப்பி ஏத்திவிடுவது நியாயம்தானா?
சூடு சொரணை இல்லை?
"பச்சை துரோகி, கேவலமா இல்லை? சூடு, சொரணை இல்லை?" இந்த வார்த்தைகள் எல்லாம் நாட்டின் பிரதமரை வைகோ பேசியதுதான். ஆயிரம் இருந்தாலும் மோடி இந்த நாட்டின் பிரதமர். அவரை எதிர்க்க எத்தனையோ போராட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால் வார்த்தைகளில் இல்லை. எதையுமே எதிர்ப்பதற்கு ஒரு நாகரீகம் உள்ளது. அதை வெளிப்படுத்துவதற்கேன்றே ஒரு பாங்கும் உள்ளது. இப்படி அடுத்தவர்களை மரியாதையின்றி பேசுவது முதலில் தங்களுக்குதான் அது இழுக்கு.
பெரிய மைனஸ்
லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று வைகோ பக்கம் உள்ளனர். தன் பேச்சுதிறமையால், போராட்ட குணத்தால் கட்டிப்போட்டவர் வைகோ. ஆனால் அந்த போராட்ட குணம் வன்முறைக்கு விதையாக இருந்துவிடக்கூடாது. இதுதான் வைகோவின் மைனஸ் மட்டுமல்ல மதிமுகவின் மிகப்பெரிய மைனஸும்கூட!