அது எல்லாம் வெளியில் சொல்ல முடியாது... புரியாத புதிராக வைகோவின் பேட்டிகள்!
Recommended Video
சென்னை: மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ அண்மையில் அளிக்கும் பேட்டிகளில் சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது என தொடர்ந்து கூறி வருகிறார். அப்படியான விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் ஏன் தெரிவிக்க வேண்டும்? என்கிற கேள்வியும் எழுகிறது.
23 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்யசபாவுக்குள் எம்.பி.யாக நுழைகிறார் வைகோ. சில நாட்களுக்கு முன்னர் இந்து நாளிதழுக்கு வைகோ பேட்டி அளித்திருந்தார்.
அதில், வி.பி.சிங். ஆட்சி காலத்தில் புலிகளுக்கு தேவையான ஆயுதப் பட்டியலை பிரதமரிடம் கொடுத்தேன். அவரோ கூட்டணி ஆட்சி என்பதால் ஆயுத உதவி செய்ய முடியாது. மருத்துவ உதவியை செய்ய தயார் என கூறியிருந்தார்.
மருந்துகள் எங்கே?
இதையடுத்து மருந்து பொருட்களை வாங்கித் தர ரூ70 லட்சம் ஒதுக்கீடு செய்தார் வி.பி.சிங். இது தொடர்பாக அதிகாரிகள் தம்மை சந்தித்தனர். அவர்களிடம் மருந்து பொருட்களின் பட்டியலை கொடுத்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த உதவி புலிகளுக்கு கிடைக்கவில்லை. என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் இப்போது பேசவிரும்பவில்லை. அதை என்னுடைய சுயசரிதையில் எழுதுவேன் என குறிப்பிட்டிருந்தார்.
தனி கட்சி சூழல்
அவரது இந்த பேட்டி சமூக வலைதலங்களில் விவாதப் பொருளானது. அப்போது நடந்த சில கசப்பான சம்பவங்கள்தான் வைகோ தனி கட்சி தொடங்க வேண்டிய நெருக்கடி வரைக்கும் போனது என்கிற விவரங்கள் அரசல் புரசலாக வெளிப்பட்டன.
ரகசிய பேச்சுகள்
இந்நிலையில் தற்போது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் வைகோ. அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு நீண்டபேட்டி அளித்த வைகோ, பிரதமர் மோடியிடம் மேலும் பல விஷயங்களை பேசியிருக்கிறேன். அதை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது என கூறினார்.
விமர்சனங்களை தவிர்க்கலாம்
மக்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் வைகோ வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத சில விஷயங்களை தாம் கடுமையாக எதிர்க்கும் மோடியிடம் விவாதித்திருக்கிறார் என்கிறார். அது ஈழத் தமிழர் விவகாரமா? அல்லது யாருக்கேனும் ஆதாயத்தை ஏற்படுத்தி தரும் முயற்சியா? என்பதுதான் புரியாத புதிர். வெளியில் சொல்ல முடியாத விவரங்களை சொல்லாமலே கடந்துவிடுவதுதான் விமர்சனங்கள் எழுவதைத் தவிர்க்கும்.