நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர், வைகோ இன்று தெரிவித்தார்.
சென்னை, விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபாத் தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களையும், 18 சட்டமன்ற இடைதேர்தல்களில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்களையும் வெற்றி அடைய செய்வதற்காக நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.
தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் தொடங்கி, ஏப்ரல் 16ந்தேதி வரை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இந்தியாவில் மோடி எதிர்ப்பலை வீசுவது போல, அதிமுக ஆட்சிக்கும் தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கிறது.
பிரசார கூட்டத்தில் 4 மொழிகளில் பேசி அசத்திய நாகை அதிமுக வேட்பாளர்.. திகைத்து போன அமைச்சர்
40 லோக்சபா தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழக வாக்காளர்கள் தீர்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு நான் எனது பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன்.
மதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதுதான் எந்த சின்னம் என்பதை குறிப்பிட முடியும். தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு மதிப்பு அளிக்காமல், தமிழக அமைச்சரவைக்கு அனுப்பி வைத்த கோரிக்கையை குப்பையில் போட்டது போல் பேசுகின்றார் கவர்னர்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அபிப்பிராயத்தை கேட்டது வரம்பு மீறிய செயல். அல்லது அதிமுக கேட்டு இருந்தால் அது மிக பெரிய துரோகம். இவ்வாறு அவர் கூறினார்.