சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் துரை வையாபுரி... வைகோ வாரிசின் அரசியல் என்ட்ரி உறுதி..!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் துரை வையாபுரியின் அரசியல் என்ட்ரிக்கு ஒரு வழியாக இசைவு தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் மதிமுகவில் துரை வையாபுரிக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுப்பு: ஸ்டாலின், வைகோ சாடல்
துரை வையாபுரி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தொழிலதிபராக இருந்து வருகிறார். இதுவரை அவருக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால் பெரியளவில் கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் தலைக்காட்ட மாட்டார். துரை வையாபுரியின் பங்கேற்பை வைகோவும் விரும்பமாட்டார். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மதிமுக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் துரை வையாபுரியை காண முடியும்.
விருதுநகர் மாவட்டம்
அதுவும் வைகோ கலந்துகொள்ள முடியாத சூழலில் தனது சொந்தமாவட்டம் என்பதால் மகனை தன் பிரதிநிதியாக அனுப்பி வைப்பார். இப்படிப்பட்ட சூழலில் அரசியலிலும் வைகோவின் பிரதிநிதியாக அவரது மகன் அடியெடுத்து வைப்பதற்கான காலம் கனிந்துவிட்டது போல் தெரிகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதயப்பிரச்சனை தொடர்பாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் வைகோ தனது பழைய வேகத்தை கட்டுப்படுத்திக்கொண்டார்.
ஆவேசம்
மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாக தனது ஆக்ரோஷப் பேச்சையும், ஆவேச பேட்டியையும் ஒதுக்கி வைத்துவிட்டார். வயது முதிர்வு காரணமாக வைகோவுக்கும் முன்பு போல் சுற்றுப்பயணங்கள் செல்ல முடிவதில்லை. அதுவும் கொரோனாவுக்கு பிறகு கடந்த 6 மாதங்களாக அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.
வாரிசு அரசியல்
இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துரை வையாபுரிக்கு மதிமுகவில் முக்கியப் பொறுப்பு தருமாறு நிர்வாகிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் வைகோ அதற்கு செவிசாய்க்கவில்லை. வாரிசு அரசியல் என்ற முத்திரைக்கும் விமர்சனத்திற்கும் அஞ்சி தனது மகன் அரசியலுக்கு வருவதை அவர் விரும்பாமல் இருந்தார். இந்நிலையில் கொரோனா காலம் அவரை சற்றி மாற்றியோசிக்க வைத்திருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல்
அதன்படி விரைவில் கட்சியில் முக்கியப் பொறுப்பேற்று சட்டமன்றத் தேர்தலில் துரை களமிறங்குவார் என மதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை மகனின் அரசியல் வருகையை முழுமையாக விரும்பாத வைகோ, அரைமனதோடு என்றாலும் இப்போது அதற்கு ஒரு வழியாக இசைவளித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்போதே சாத்தூர் மற்றும் சிவகாசி தொகுதிகளில் துரைக்காக பம்பரமாக சுழலத் தொடங்கியுள்ளனர் மதிமுகவினர்.