இதுக்கு மேல இறங்கி வர முடியாது.. திமுக அவசரமாக அனுப்பிய 2 தூது.. கறார் காட்டிய வைகோ.. என்ன நடந்தது?
சென்னை: திமுகவின் இரண்டு மூத்த புள்ளிகள் சமாதான தூது சென்றும் கூட மதிமுக கொஞ்சம் கூட மசியவில்லை.. திமுக - மதிமுக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில்தான் இருக்கிறது.. கூட்டணி பேச்சுவார்த்தை மீட்டிங்கில் அப்படி என்னதான் நடந்தது?
2021 தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தாலும் இன்னும் முழுமையாக கூட்டணி உடன்படிக்கைகள் செய்து முடிக்கப்படவில்லை. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மிக குறைந்த எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்கும் எண்ணத்தில் திமுக இருக்கிறது.
எப்படியாவது 180+ இடங்களில் போட்டியிடலாம் என்பதே திமுகவின் பிளானாக இருக்கும் என்கிறார்கள். திமுகவின் இந்த திட்டம் காரணமாக கூட்டணி கட்சிகள் எல்லாம் அதிருப்தியில் உள்ளது. அதிலும் வைகோ திமுக மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
என்ன
சந்தோசம் இல்லாத முகங்கள், கனத்த மௌனம்.. இதுவே திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை செய்துவிட்டு வெளியே வரும் கட்சிகளின் நிலையாக இருக்கிறது. காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய முக்கிய கூட்டணி கட்சிகள் திமுக ஒதுக்கிய இடங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கேட்பதால் தொடர்ந்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
மதிமுக
இதில் மதிமுக வைக்கும் கோரிக்கையை திமுக விரும்பவில்லை. திமுகவிடம் மதிமுக முதலில் 15 தொகுதிகள் வரை கேட்டது. அதன்பின் தொடர் ஆலோசனைகள் மூலம் மனமிறங்கிய மதிமுக 8 தொகுதிகள் கொடுத்தால் போதும், ஆனால் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக அறிவித்துவிட்டது. ஆனால் மதிமுகவின் இந்த கோரிக்கையை திமுக ஏற்கவில்லை.
உறுதி
இதுவரை நடந்த மீட்டிங் அனைத்திலும் மதிமுக தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துவிட்டதாம். 8 தொகுதி கொடுத்தால் ஓகேதான்.. ஆனால் நாங்கள் சொல்லும் தொகுதியைதான் கொடுக்க வேண்டும். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். தனி சின்னம்தான் என்று மதிமுக கூறியுள்ளது. திமுக இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
சமாதானம்
இதற்காக திமுகவில் இருந்து சமாதான தூதும் சென்று இருக்கிறது. திமுகவின் இரண்டு மூத்த தலைவர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மதிமுகவிடம் சமாதானம் பேச சென்றுள்ளனர். வைகோவை நேரடியாக சந்தித்து சமாதானம் பேசி உள்ளனர். ஆனால் இந்த மீட்டிங்கிலும் வைகோ தனது நிலைப்பாட்டில் கறாராக இருந்துள்ளார்.
நிலைப்பாடு
என்ன நடந்தாலும் 8க்கும் கீழ் செல்ல முடியாது.. தனிசின்னம்தான் கண்டிப்பாக என்று வைகோவும் கூறிவிட்டார். மதிமுகவிற்கு தனி அடையாளம் இருக்க வேண்டும். கட்சிக்கு தனி மதிப்பு இருக்க வேண்டும் என்பதால் வைகோ வைராக்கியமாக இருக்கிறார். அதிமுகவில் பாமகவிற்கு கிடைக்கும் மதிப்பை போல திமுகவில் மதிமுகவிற்கும் மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதில் வைகோ உறுதியாக இருக்கிறார்.
தீவிரம்
நாளை மாலைக்குள் இந்த பேச்சுவார்த்தையை முடித்து வைகோவை சமாதானம் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இரண்டு கட்சிக்கும் ஒத்துவரும் வகையில் இடங்களை ஒதுக்க திமுக யோசனை செய்து வருகிறது. இனி நடக்கும் மீட்டிங்கில் இது தொடர்பாக ஆலோசனைகளை செய்ய உள்ளனர். தேர்தல் நெருங்கி வருவதால் வேகமாக இந்த பேச்சுவார்த்தை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.