வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை அழைத்து வாருங்கள்- மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்
சென்னை: வெளிநாடுகளில் சிக்கி இருக்கின்ற தமிழர்களை அழைத்து வாருங்கள் என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வைகோ இ மெயில் மூலம் அனுப்பிய கடித விவரம்:
அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வந்தே பாரத் திட்டத்தை, நடுவண் அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றது. கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், வேலை வாய்ப்பு இழந்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்தவர்கள், நாடு திரும்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அதன்படி, 50000 க்கும் மேற்பட்டவர்கள் நாடு திரும்பி விட்டனர். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஓரிரு வான் ஊர்திகள் மட்டுமே வந்தன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்றனர்.
உணவு, இருப்பிடம், உரிய மருத்துவ வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர். தங்கி இருக்கின்ற இடத்திற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் வடிக்கின்ற கண்ணீரை, நடுவண் அரசு கண்டு கொள்ளவில்லை.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை.. 'மனதின் குரலில்' மனம் திறந்த பிரதமர் மோடி
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வான் ஊர்திகளின் பட்டியலிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது. இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும். பன்னாட்டு வான் ஊர்திகள் பறக்க தமிழக அரசு அனுமதி மறுத்து வருகின்றது. எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி, தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பன்னாட்டு வான் ஊர்திகள் பறக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.