100வது சுதந்திர நாளில் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருக்காது என வரலாறு எழுதும்: வைகோ
சென்னை: நாட்டின் 100-வது சுதந்திர நாளில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என வரலாறு எழுதும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும் வைகோவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. காங்கிரஸை வைகோ தொடர்ந்து விமர்சித்து வருவதால் காங்கிரஸ் கொந்தளிப்பில் இருக்கிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா நினைவிடத்துக்கு இன்று வைகோ சென்றார். அங்கு மண்டியிட்டு அண்ணாவை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
இந்த கொளுத்தும் வெயிலில் காலணி இல்லாமல்தான் அண்ணா நினைவிடத்துக்கு சென்றேன். அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்களைத் தூவி, என் உயிர் பிரியும் முன் தமிழீழம் மலர வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்ற மன்றாடிக் கேட்டேன்.
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸை 30 விழுக்காடும் பாஜகவை 70 விழுக்காடுமாக விமர்சித்தேன். இந்த தேசம் 100- வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியாக இருக்காது என வரலாறு எழுதும்.
இவ்வாறு வைகோ கூறினார்.