நீங்கியது 4 நாள் குழப்பம்.. தடைகளை தகர்த்தார் வைகோ.. 23 வருடங்களுக்கு பிறகு ராஜ்ய சபா எம்பி ஆகிறார்
23 வருடங்களுக்கு பிறகு ராஜ்ய சபா எம்பி ஆகிறார் மதிமுக பொதுச்செயலாளர்
Recommended Video
சென்னை: கடந்த 4 நாட்களாக குழப்பி கொண்டிருந்த பிரச்சனை தற்போது சுமூக தீர்வுக்கு வந்துள்ளது. ராஜ்ய சபா தேர்தலுக்கான வைகோவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணி சார்பில் கண்டிப்பாக ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக வைகோவுக்கு உறுதி தரப்பட்டது. அதன்படியே திமுகவும் சீட் தருவதில் ஆர்வம் காட்டியது.
ஆனால் 10 வருஷத்துக்கு முன்னாடி, திமுக அரசு இன்னும் சொல்ல போனால் கருணாநிதி தொடுத்த தேச துரோக வழக்கில் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது. அதில் வைகோ குற்றவாளி என சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் வைகோ, திமுக ஆதரவுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராஜ்ய சபா
இது சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வந்தன. வைகோவின் வேட்பு மனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. மற்றொருபுறம் ராஜ்ய சபா செல்வதில் எந்த தடையும் இருக்காது என்றும் கூறப்பட்டது. ஒருவேளை பாதக முடிவு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதால், திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். ஸ்டாலின் இளங்கோவை அறிவித்ததில் ஒரு திட்டம் இருப்பதாகவே கருதப்பட்டது.
பாஜக திட்டம்
ஒருவேளை வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், அந்த ஒரு இடத்திற்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்படும். அப்படி தேர்தல் நடக்கும் பட்சத்தில், அதிமுக சார்பாக பாஜக வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்று ஒரு தகவல் வந்தது. பாஜகவின் இந்த திட்டத்தை முறியடிக்கத்தான் ஸ்டாலின் 4-வது வேட்பாளராக இளங்கோவை அறிவித்தார்.
சோர்வு
இப்படி ஸ்டாலின் மாற்று வேட்பாளரை அறிவித்ததும், மதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியானார்கள், சோர்ந்தும் போய்விட்டார்கள். இதனால் தொண்டர்கள் அதிருப்தியை போக்கும் வகையில் செய்தியாளர்களிடம் வைகோ பேசும்போது, "மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினிடம் சொன்னதே நான்தான்" என்றார்.
சலசலப்பு
எனினும் வைகோ ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும்? ஒருவேளை பாதகமான முடிவு வந்தால்கூட அதற்கு மாற்றாக மதிமுகவிலேயே ஒரு வேட்பாளரை வைகோ ஏற்பாடு செய்திருக்கலாமே? எதற்காக திமுக வேட்பாளரை அறிவிக்க செய்ய வேண்டும்" என்ற சலசலப்பும் நேற்று முழுவதும் எழுந்தது.
மகிழ்ச்சி
இந்நிலையில்தான் வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற நல்ல செய்தி வந்துள்ளது. யாரை காரணம் காட்டி திமுகவை விட்டு அன்று வெளியேறி வந்தாரோ, இன்று அவராலேயே ராஜ்ய சபா சீட் கிடைத்துள்ளது. ஒரு பக்கம் இது நெருடலாக இருந்தாலும், 23 வருடங்களுக்கு பிறகு ராஜ்யசபா எம்பியாக உள்ளார் என்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். எத்தனையோ இடர்பாடுகள் வைகோவுக்கு அடுத்தடுத்து ஏற்பட்டாலும், அதை எல்லாவற்றையும் வைகோ தகர்த்து கொண்டு முன்னேறியே வருவது பாராட்டத்தக்கது!