பிரதமர் மோடிக்கு நன்றி.. இந்த குறளையும் இதயத்தின் ஓரத்தில் எழுதிவையுங்கள்.. வைரமுத்து டிவிட்!
சென்னை: லடாக் எல்லையில் திருக்குறளை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்து, அவருக்கு இன்னொரு குறளை தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார்.
வீரர்கள் முன் பேசிய பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டார். அதில்,
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
என்ற குறளை பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த செயல் நாடு முழுக்க பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த குறளின் பொருள் "வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் என்பதாகும்.
"மறமானம் மாண்ட.." லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய மோடி
இதை பிரதமர் மோடி குறிப்பிட்டு தனது பேச்சில் பேசி இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி எல்லையில் திருக்குறள் கூறியது குறித்து கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார். அதில், படைவீரர்களுக்கான உரையில் படைமாட்சி என்ற அதிகாரத்திலிருந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.
'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு'
என்ற இன்னொரு குறளையும் அவர் இதயத்தின் ஓரத்தில் எழுதிவைக்கிறோம், என்று வைரமுத்து டிவிட் செய்துள்ளார்.இதன் பொருள் மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது ஒரு நல்ல நாடு., என்பதாகும்.