நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து
Recommended Video
சென்னை: 17-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கிய நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த 38 எம்பிக்களும் தங்கள் தாய்மொழியான தமிழில் எம்பியாக பதவியேற்றனர். நாடாளுமன்றத்தில் 38 எம்பிக்களும் அழகு தமிழில் பதவியேற்றதை பார்த்து மகிழ்ந்த கவிஞர் வைரமுத்து தமிழில்
உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். பாராட்டி கவிதை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
எனினும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகம் தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அமைச்சர்களும் அன்று பதவியேற்றனர்
இந்நிலையில் புதிய 17-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக பதவி ஏற்பு வைபவம் நடந்து வருகிறது. இன்று தமிழகத்தைச் சேர்ந்த 38 எம்பிக்களும், புதுச்சேரியை சேர்ந்த எம்பியும் தமிழ் மொழியில் உறுதி எடுத்து அமைச்சர்களாக பதவியேற்றனர். இதனை சமூக வலைதளங்களில் மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். தமிழ் வாழ்க என இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டாகியும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நாடாளுமன்றத்தில் 38 எம்பிக்களும் அழகு தமிழில் பதவியேற்றதை பார்த்து மகிழ்ந்ததோடு , அவர்களை பாராட்டி டுவிட்டரில் கவிதையும் வெளியிட்டுள்ளார். அதில்,
"நாடாளுமன்றத்தில் தமிழில்
உறுதிமொழி ஏற்ற
தங்கங்களை வாழ்த்துகிறேன்.
நாம் எந்த மொழியையும்
எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.
சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள்.
பயணிப்போம் - மொழி காக்க;
தமிழையும் ஆட்சிமொழி ஆக்க."
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.