தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...? ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்
சென்னை: குடியரசு தின விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்த மறுத்த சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 73-வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அதிகாரிகள் பலரும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்திருந்தனர்.
இது தொடர்பாக அங்கு சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க தேவை இல்லை என்பது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு என வாதிட்டனர் அந்த அதிகாரிகள். ஆனால் தமிழக அரசு, கட்டாயம் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளதே என கேட்டதற்கு, அதுபற்றி எங்களுக்கு தெரியாது என பதிலளித்தனர் அந்த அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன், பாஜகவின் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
தாய், தந்தை, ஆசானுக்கு
எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா?
அது சட்டமன்று; அறம்.
தமிழ்த்தாய் வாழ்த்தும்
அப்படியே
சட்டப்படியும்
எழுந்து நிற்கலாம்;
அறத்தின்படியும்
எழுந்து நிற்கலாம்.
இரண்டையும்
மறுத்தால் எப்படி?
தமிழ்த்தாய் மன்னிப்பாள்;
சட்டம்...?
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.