ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் அஞ்சல் துறை தேர்வுகளா? கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம்
சென்னை: அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறைக்கு கணக்கர் பதவிகளுக்கு இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அஞ்சல் துறை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை. அஞ்சல்துறையின் நடவடிக்கைக்கு கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு:
அஞ்சல்துறைத் தேர்வுக்குத்
தமிழில் தயாராகிக் கொண்டிருந்த
ஒரு தலைமுறையின் தலையில்
இடி விழுந்திருக்கிறது.
ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான்
தேர்வெழுத வேண்டுமா?
இனி
ஆங்கிலத்திலும் இந்தியிலும்
முகவரி எழுதினால்தான்
அஞ்சல் சென்று சேருமா?
சினத்தோடு கண்டிக்கிறோம்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.