தமிழக அலங்கார ஊர்தியை நிராகரிக்க மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி காரணங்கள் இதுதான்! வைரமுத்து ட்வீட்
சென்னை: நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வ.உ.சி வியாபாரி, வேலுநாச்சி ஜான்சிராணி சாயல், மருதிருவர் தீவிரவாதிகள் என மத்திய அரசு காரணம் கூறியுள்ளதாகவும் வைரமுத்து தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம் என பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்திருக்கிரது மத்திய அரசு.
தேசம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா? தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லையா- டிடிவி தினகரன் கொதிப்பு
விடுதலை வீரர்கள்
தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், வட இந்தியாவில் ஜான்சிராணி பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆங்கிலேயர்கள் வரி வசூல் உரிமை பெற்ற தொடக்க காலத்திலேயே அவர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தி வெற்றி வாகை சூடிய வீரமங்கை வேலுநாச்சியார், அவர்தம் தளபதிகள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் ஆகியோரது உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் மத்திய அரசு இந்த அலங்கார ஊர்தியை அனுமதிக்கவில்லை.
மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் இந்த போக்குக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பியுள்ளார்.
வேதனையும் ஏமாற்றமும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது வேதனையும் ஏமாற்றமும் தருகிறது. மத்திய அரசு அதிகாரிகள் 7 முறை திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றனர். அத்தகைய திருத்தங்கள் செய்த போதும் தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்திருக்கின்றனர். இதில் பிரதமர் மோடி தலையிட்டு தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வைரமுத்து பதிவு
இந்த விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை. வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது. திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது. இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.