SPB: என் சங்கீத ஜாதி முல்லை சருகாகி போனது.. என் இளைய நிலா குழிக்குள் இறங்குகிறது.. வைரமுத்து கண்ணீர்
சென்னை: சங்கீத ஜாதி முல்லை இன்று சருகாகி போனதே என எஸ்பிபியின் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து வீடியோ மூலம் கவிதை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டரில் வீடியோ மூலம் கூறுகையில் ஆயிரம் காதல் கவிதைகள்
பாடிய உனக்குக்
கண்ணீர்க் கவிதை
வடிக்க வைத்துவிட்டதே காலம்;
இசையை இழந்த மொழியாய்
அழுகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, எஸ்பிபிக்காக ஒரு கவிதையையும் செதுக்கியுள்ளார்.
மறைந்தனையோ மகா கலைஞரே
சுரப்பதை நிறுத்திக் கொண்டதா
உன் தொண்டை அமுதம்?
காற்றுவெளியை கட்டி போட்ட உன் நாவை
ஒட்டி போட்டதா மரண பசை?
பாட்டுக் குயில் போனதென்று
காட்டுக் குயில்கள் கதறுகின்றன
ஒலிப்பதிவு கூடங்கள் எல்லாம் ஓசைக் கொன்று
எழுந்து நின்று மவுனம் அனுஷ்டிக்கின்றன
எஸ்பிபி: கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஒலிக்கும்.. ஆனால் அதன் உரிமையாளர்?.. ரஜினி உருக்கம்
மனித குலத்தின் அரைநூற்றாண்டின் மீது ஆதிக்கம் செலுத்தியவனே
மண் தூங்க பாடினாய்
மலர் தூங்க பாடினாய்
கண் தூங்க பாடினாய்
கடல் தூங்க பாடினாய்
நீ தூங்க ஒரு தாலாட்டை எவர் பாடியது?
மனிதன் பாடவியலாதென்று மரணம் பாடியதோ
பொன்மேடை கண்டாய்
பூ மேடை கண்டாய்
இந்த உலக உருண்டையை
முப்பது முறை வலம் வந்து
கலை மேடை கண்டாய்
என் கவி மேடை கண்டாய்
கடைசியில் நீ மண் மேடை காண்பது கண்டு
இடி விழுந்த கண்ணாடியாய் நெஞ்சு
பொடி பொடியாய் போனதே பாலு
40 ஆண்டுகள்
என் தமிழுக்கு இணையாகவும்
துணையாகவும் வந்தவனே
இன்றுதான் என் பொன்மாலை பொழுது
அஸ்தமன மலைகளில் விழுகிறது
என் சங்கீத ஜாதி முல்லை
சருகாகி போனது
என் இளைய நிலா
குழிக்குள் இறங்குகிறது
என் பனி விழும் மலர்வனம்
பாலைவனமானது
காதல் ரோஜாவே
கருகி போகிறது!
என் வண்ணம் கொண்ட வெண்ணிலா!
மரணக் கடலில் விழுந்துவிட்டது
மழைத் துளியை மறக்காத சாதக பறவை போல்
உன்னை நினைத்தே நான் இருப்பேன்
ரோஜாக்களை நேசிக்கும் புல்புல் பறவை போல்
உன் புகழையே நான் இசைப்பேன்
முகமது ரஃபி, கிஷோர் குமார், முகேஷ், மண்ணா டே
தியாகராஜ் பாகவதர், டிஎம் சவுந்திரராஜன் வரிசையில்
காலம் தந்த கடைசி பெரும் பாடகர் நீ
உன் உடலை குளிப்பாட்டுவதற்கு
கங்கை வேண்டாம்
காவிரி வேண்டாம்
கிருஷ்ணா வேண்டாம்
கோதாவரி வேண்டாம்
உலகம் பரவிய உன் அன்பர்களின்
ஜோடிக் கண்கள் வடிக்கும்
கோடித் துளிகளால்
குளிப்பாட்டப்படுகிறாய் நீ..
இதோ என்னுடையதும் இரண்டு.....
Recommended Video
ஆயிரம் காதல் கவிதைகள்
— வைரமுத்து (@Vairamuthu) September 25, 2020
பாடிய உனக்குக்
கண்ணீர்க் கவிதை
வடிக்க வைத்துவிட்டதே காலம்;
இசையை இழந்த மொழியாய்
அழுகிறேன்.#SPBalasubrahmanyam #SPB https://t.co/J6WcHiaWl2