தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்
விமான படை வீரர்களுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: "நாங்கள் கனவு கண்டால் ஆகாயம் அதிரும்...நட்சத்திரம் உதிரும்..." என்று அன்று வைரமுத்து சொன்னது நூத்துக்கு நூறு பலித்துவிட்டது. இன்று நடத்திய விமான படை தாக்குதலுக்கு வீர வணக்கம் சொல்லியுள்ளார் வைரமுத்து!
தமிழ் பாடலாசிரியர்களிலேயே, சமூக அவலங்களுக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுத்து கொண்டிருப்பதில் முதன்மையானவரும், முக்கியமானவரும் கவிஞர் வைரமுத்துதான்.
சமூகத்துக்கு எதிரான சம்பவங்களை பேட்டிகள் மூலமாகவும், கவிதை வடிவிலும் அதனை வெளிப்படுத்த தயங்காதவர் வைரமுத்து. அது விவசாயிகள் பிரச்சனை முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு வரை நீண்டு வந்தது.
|
கவிதை
இப்போது 40 பேர் மீது தாக்குதலை நடத்தி கொடூரத்தை நடத்தியபோது கூட வைரமுத்து, இந்தியா மன்னிக்காது என்ற தலைப்பில் கவிதை ஒன்றினை வெளியிட்டார்.
காஷ்மீர் ரோஜா
அதில், "எப்படி சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை...எப்படி பொறுப்போம் சிம்லா பனிக்கட்டிகள் சிவப்பாய் உறைவதை... என்ற அந்த இரங்கற் கவிதை படிப்பவர் மனதை கலங்கடித்தது. இன்று இந்தியா தந்த பதிலடிக்கு கவிஞர் தனது கவிதை நடையிலேயே வீரர்களுக்கு வணக்கம் சொல்லி உள்ளார்.
|
அசகாய சூரர்களே
அதில், "போர்மீது விருப்பமில்லை.
ஆனால், தீவிரவாதத்தின் மீது
தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.
உள்நோக்கம் இல்லை
உண்மையிலேயே வைரமுத்து சொன்னதுபோல் இந்தியா மன்னிக்காதுதான்.. மன்னிக்கவும் இல்லை. இந்த ட்வீட்டில் வைரமுத்து ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி உள்ளார். போர் புரிவது இந்தியாவின் நோக்கம் இல்லை என்றாலும் அதற்கான வழியை வித்திட்டு சென்றதற்கு காரணம் தீவிரவாதம்தான் இந்த ட்வீட்டில் வைரமுத்து உரக்க சொல்லி தெளிவுபடுத்தி உள்ளார்.