வைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல்.. விமரிசையாக நடைபெற்ற வெளியீட்டு விழா
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கில் நேற்று, நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதியரசி. விமலா ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசுகையில், திரைத்துறையில் வைரமுத்து அளவுக்கு தேசிய விருது வாங்கிய கவிஞர் இந்தியாவிலேயே இல்லை. அவர் எழுதிய புதினம், கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த இரண்டு காவியங்களும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கக்கூடியவை. அப்படிப்பட்ட மகத்தான கவிஞரிடமிருந்து நமக்கு கிடைத்திருப்பது தான் இந்த தமிழாற்றுப்படை என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.
கலைஞருடைய நினைவின்றி கவிஞரால் இருக்கவே முடியாது. அவரை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். கவிஞர் பெறாத விருதுகள் இல்லை - கிடைக்காத பாராட்டுகள் இல்லை - செல்லாத நாடுகள் இல்லை - அவர் எழுதாத எழுத்துக்கள் இல்லை - தொடாத சிகரங்கள் இல்லை. எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அங்கிருந்தபடி கலைஞர் தான் எனக்கு 'தமிழ் ஆசான்' என்று உரத்த குரல் கொடுப்பதில் அவர் என்றைக்கும் பின்வாங்கியதில்லை.
கவிப்பேரரசு என்ற பட்டமே ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய பட்டம் தான். இவருக்கு தமிழ் தான் முதல் காதலி. இவருடைய எழுத்தாற்றலைப் பொறுத்தவரையில் கடைக்கோடியில் இருக்கக்கூடிய மக்கள் வரையில் சென்று சேர்ந்தவை. தன்னுடைய லட்சியத்தை - கொள்கையை எழுத்தின் மூலமாக எடுத்துச் சொல்வதற்கு ஒருபோதும் தயங்காதவர்.
அந்தத் துணிவு மிக்க எழுத்தாற்றலின் இன்னொரு வெளிப்பாடு தான் இந்த தமிழாற்றுப்படை. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கின்றது. காரணம் தமிழ் மொழியின் தன்மையை - திராவிட இனத்தின் பெருமையை எப்படியாவது சிதைத்திட வேண்டும். வடமொழி ஆதிக்கத்தைக் எப்படியாவது நிறுவிட வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து அதற்காக பலர் துடிதுடித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அதனை எதிர்கொள்ளக் கூடிய வலிமை தரக்கூடிய நூலாக இந்த தமிழாற்றுப்படை நம் கைக்கு கிடைத்திருக்கிறது.
நம்முடைய மொழியும் அதன் பண்பாடும் பல எதிர்ப்புகளை ஆதிக்கங்களை முறியடித்து 3000 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இன்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த சிறப்புக்கு காரணமான தமிழ்ச் சான்றோர்களை இந்த தமிழாற்றுப்படையில் வரிசைப்படுத்தி காட்டியிருக்கின்றார் நம்முடைய கவிப்பேரரசு.
தொல்காப்பியரில் இருந்து அவர் துவங்கி இருக்கின்றார். தொல்காப்பியம் என்பதே ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட வடிவம் தான் என்பதை நம்முடைய கவிஞர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மன்னனின் அவையில் தனி ஒரு பெண்ணாக நீதி கேட்ட கண்ணகி மூலம், முடியாட்சி காலத்திலும் ஜனநாயகம் நிலவியதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகின்றது. சங்க இலக்கிய தென்றலின் மணம் வீசிய 100 பூக்களைப் பாடிய கபிலரின் தமிழ் திறத்தை கவிப்பேரரசு எடுத்துக் காட்டியிருக்கின்றார். ஆத்திகம் - நாத்திகம் என்று பேதமின்றி தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய சான்றோர்களின் பணிகளை விருப்பு வெறுப்பின்றி நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் இந்த நூலில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.
கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், இறைப்பற்று இலக்கியம் செழிக்க செயல்படும் பெரும்பணியை பதிவு செய்திருக்கின்றார். ஔவையார் என்பவர் ஒருவரா, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு ஆட்கள் இருந்தார்களா, என்ற ஆய்வு நோக்கோடு தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக இந்த தமிழாற்றுப்படையில் அவர் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
தமிழினுடைய பெருமைகளை சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசால் மும்மொழித் திட்டம் திணிக்கப்படக்கூடிய ஒரு நிலை வந்திருக்கின்றது. ரயில்வே துறையில் துவங்கி மத்திய அரசு நிறுவனங்களில் தமிழை ஒழித்துக்கட்டக்கூடிய வேலையை துவங்கி இருக்கின்றார்கள். நாம் எல்லோரும் போராட வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றோம். அப்படி போராட வேண்டிய நிலைக்கு நமக்கு துணையாக தமிழாற்றுப்படை நமக்கு ஒரு ஆயுதமாக கிடைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட தமிழாற்றுப்படை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தை தமிழர்களுக்கு தந்திருக்கின்ற அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுகளை நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இறுதியில், நன்றி தெரிவித்து வைரமுத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமீரக திமுக தலைவர் எஸ்.எஸ். மீரான் உள்ளிட்ட பலருக்கும் நூலின் பிரதியை திமுகதலைவர் மு.க.ஸ்டாலின்,வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.