முள் மரம் முளைவிடும்போதே "கிள்ளப்பட வேண்டும்.." கவிஞர் வைரமுத்து பரபர ட்வீட்
சென்னை: முள்மரம் முளைவிடும் போதே கிள்ளப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு விழாவில் பேசிய திமுக எம்பி ஆ ராசா மனுஸ்மிருதி குறித்து பேசியிருந்தார். அதுகுறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதை பல அரசியல் தலைவர்கள் கண்டித்தனர். இந்த சம்பவத்திற்காக ஆ ராசாவின் பதவியை முதல்வர் ஸ்டாலின் பறிக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன.
அது போல் ஆ ராசாவை கைது செய்யக் கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இது போன்று போராட்டங்கள் நடந்த நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பினின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு நடத்தியது.
அது போல் 11 மாநிலங்களில் 105 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் நாங்கள் என்ன தீவிரவாதிகளா என கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷமிட்டனர். இந்த நிலையில் கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
உங்களோடு கைக்குலுக்கியது தான் உள்ளங்கை பெருமை.. பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு, வைரமுத்து இரங்கல்
கோவையில் ஒப்பணக்கார தெருவில் பாஜக , இந்து முன்னணியினருக்கு சொந்தமாக உள்ள துணிக் கடை, வெல்டிங் கடைகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பொள்ளாச்சி குமரன் நகரில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அது போல் தேனி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டன.
இதையடுத்து கோவை, பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக பிஎஃப் அமைப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என அதிமுக, பாஜக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஜாதிய ரீதியலிலான பாகுபாடுகளை சில அமைச்சர்கள் பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது போன்ற சம்பவங்களால் அண்மைக்காலமாக தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் முள் மரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற தொனியில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சீராகச் செல்லும்
தமிழ்நாட்டரசின் பயணத்துக்கு
ஊறுசெய்யும் யாரையும்
சட்டமோ சமூகமோ மன்னிக்காது
புகை அடங்குமுன்
பகை அடக்க வேண்டும்
"முள்மரம் முளைவிடும்போதே
கிள்ளப்பட வேண்டும்"
என்றார் வள்ளுவர்
காவல் துறையோர்
வள்ளுவர் வழியில் செல்லுவர்
இவ்வாறு தனது ட்விட்டரில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, தேனி, கன்னியாகுமரி பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது.