ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன்.. ஏன் தெரியுமா.. வைரமுத்து நெகிழ்ச்சி
மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: அண்ணாவுக்கு பக்கத்தில் கருணாநிதியை நிறுத்தி வைத்த அந்த அருஞ்செயலுக்காகவே மு.க.ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் மேல் தனிக்காதல் வைத்திருந்தவர் வைரமுத்து. அவருக்காக பல பாடல்களையும், கவிதைகளையும் எழுதி தன் பாசத்தை வெளிப்படுத்தியவர் வைரமுத்து.
கருணாநிதி மீதிருந்த நெருக்கம் மு.க.ஸ்டாலின் மீது அவருக்கு இருந்ததில்லை. தற்போது கட்சி தலைவராக அவர் பொறுப்பேற்றும் இந்த நெருக்கம் அதிகரிக்கவும் இல்லை. சின்மயி விவகாரத்தின்போதும் திமுக தரப்பிலிருந்து வைரமுத்துவுக்கு ஆதரவும் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.
வெண்கல சிலை பரிசு
இந்த நிலையில், வைரமுத்து, ஸ்டாலினை நேற்று அறிவாலயத்தில் சந்தித்து பேசினார், அப்போது, கருணாநிதிக்கு சிலை அமைத்ததற்காக மனமார்ந்த பாராட்டை தெரிவித்தார். அதற்கு நன்றியாக ஸ்டாலின், கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
ஈரம் கட்டிய நிகழ்ச்சி
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து சொன்னதாவது: "கருணாநிதியின் சிலை திறப்பு என்பது வெறும் விழாவோ, சடங்கோ சம்பிரதாயமோ இல்லை. அந்த விழா கருணாநிதியை உயிராக கருதியவர்கள், அவரை இன்னும் நெஞ்சில் சுமந்து கொண்டு இருப்பவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஈரம் கட்டிய நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சி என்பது கருணாநிதிக்கு, ஸ்டாலின் செய்த மிகப்பெரிய வரலாற்று திருப்பணி என்று நான் நினைக்கிறேன்.
அண்ணா, கருணாநிதி
அதுவும், அண்ணாவுக்கு பக்கத்தில் கருணாநிதியை நிறுத்தி வைத்த அந்த அருஞ்செயலுக்காகவே ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன். அண்ணா வேறு, கருணாநிதி வேறு அல்ல. மிக முக்கியமாக தமிழர்கள் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு.
நெஞ்சில் நிறுத்த வேண்டும்
தமிழுக்காகவும், இனத்துக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபட்ட அந்த இருபெரும் தலைவர்களும் அருகருகே துயில் கொண்டு இருக்கிறார்கள். அருகருகே நின்று கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களும் இந்த 2 பேரையும் நெஞ்சில் அருகருகே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.
தந்தை-மகன்
கருணாநிதியும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை செய்துவிட்டனர். இதன் மூலம், திருவள்ளுவர் தந்த இலக்கணத்துக்கு தந்தையும், மகனும் இலக்கியமாக திகழ்கிறார்கள். கருணாநிதியின் சிலையை எனக்கு ஸ்டாலின் பரிசாக தந்திருக்கிறார்.
அடையாள சிலை
கருணாநிதியின் தமிழுக்கும், அவரது ஆற்றலுக்கும், இனமொழி போராட்டத்துக்கும், அவரது பேரறிவுக்கும் அடையாளமாக இந்த சிலை என்னோடு இருந்து வழிகாட்டும் என நான் நம்புகிறேன்" என்றார்.