ரத்தம் உறையும் குளிரிலும் விவசாயிகளின் போராட்டம்- மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்: வைரமுத்து
சென்னை: ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசும் மனம் திறக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் 13-வது நாளாக விவசாயிகள் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்தும் உள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் நாடு தழுவிய பாரத் பந்தம் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே கவிஞர் வைரமுத்து, விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவு செய்துள்ளதாவது:
ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.