அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன்?.. ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு விளக்கம்!.. கொதிக்கும் இபிஎஸ் தரப்பு
சென்னை: டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணைவார்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதிலளித்துள்ளார்.
உண்மையான அதிமுக யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. கட்சியின் விதிகளின்படி இருவரும் ஒவ்வொரு பாயிண்டுகளை சொல்லி தாங்கள்தான் அதிமுக என நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவித்த தினகரன்.. அப்போ சசிகலா? - பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்
இரு தரப்பு வாதங்கள்
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயசந்திரன் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால் அதிமுக வழக்கு யாருக்கு சாதகமாக அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வராவிட்டால் அவர் அடுத்தகட்டமாக சசிகலா, டிடிவி தினகரனை வெளிப்படையாக சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா
ஏற்கெனவே சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து அவருக்கு சாதகமான பதிலை ஓபிஎஸ் அளித்திருந்தார். அது போல் தேவைப்பட்டால் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து பணியாற்றுவேன் என டிடிவி தினகரனும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சசிகலா, தினகரன் அதிமுகவில் எப்போது இணைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர்
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும், ஓபிஎஸ் ஆதரவு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கடந்த 10 நாட்களாக எங்களுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. 80 சதவீத தொண்டர்கள் எங்களிடம்தான் உள்ளனர். டிடிவி தினகரன், சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து கட்சி முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார். இது எடப்பாடி தரப்பினருக்கு கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாதம் என்ன
அதிமுகவின் பொருளாளருக்குத்தான் கட்சியின் சின்னம் வழங்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்கிறது. ஆனால் ஓபிஎஸ்ஸை பொருளாளர் பதவியிலிருந்து தூக்கியாகிவிட்டது, எனவே புதிய பொருளாளராக உள்ளவர் திண்டுக்கல் சீனிவாசன்தான். எனவே அவர் இருக்கும் அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட வேண்டும் என்கிறது எடப்பாடி தரப்பு.