மக்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தருவதாக வளரும் தமிழகம் என்ற கட்சி அறிவித்துள்ளது. மேலும் சட்டசபை இடைத்தேர்தலில் கமல் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
மக்கள் நீதி மய்யத்துக்கு குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் அண்மையில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து வளரும் தமிழகம் என்ற கட்சியும் மநீமவுக்கு ஆதரவு தந்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், மக்களின் பெரும் நம்பிக்கையுடன் வரவிருக்கிற 2019 நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல்களை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் வளரும் தமிழகம் கட்சி சார்பாக அக்கட்சித் தலைவர் துரை அரசன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட வேண்டியும் கோரிக்கை விடுத்திருந்தார். வளரும் தமிழகம் கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கமல்ஹாசன், அவர்களுக்கு வரவிருக்கும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 2 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கிட முடிவு செய்தார்.
அதற்கான கூட்டணி உடன்படிக்கை இன்று கமல்ஹாசனால் ஒப்புதல் அளிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது. வளரும் தமிழகம் கட்சி, மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.