சாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..!
சென்னை: பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை!
கொங்கு தமிழ்
தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். கோவையை பூர்வீகமாக கொண்ட இவர் கட்சியில் படிப்படியாக வளர்ந்து இன்று தேசியப் பதவியை எட்டிப்பிடித்துள்ளார். மைக்கும் மேடையும் கிடைத்துவிட்டால் வாய்க்கு வந்ததை பேசுபவர்கள் மத்தியில் மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளை பிரயோகம் செய்பவர் இவர். விவாதக்களமாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி அரசியல் நாகரீகம் பேணக் கூடியவர் வானதி சீனிவாசன்.
நிதானம்
இதன் காரணமாகவே ஊடக விவாத நிகழ்ச்சிகளுக்கு அவர் விரும்பி அழைக்கப்படுவார். வானதி சீனிவாசனை பொறுத்தவரை அவரை எப்போது வேண்டுமானாலும் கட்சியினர் எளிமையாக அணுக முடியும். சாக்குபோக்குகள் சொல்லி தட்டிக்கழிக்காமல் சந்திக்க வந்தவர்களை வாஞ்சையோடு வரவேற்று பேசி அனுப்புபவர். நேர்த்தியான செயல்பாடும் நிதானமான நடவடிக்கைகளும் அவருக்கு தேசியப் பதவியை தேடி வரவைத்துள்ளன.
தேசம் முழுவதும்
பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்பது அந்தக் கட்சியின் உச்சபட்ச பதவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் பதவியில் இதற்கு முன் சஞ்சிதா டோக்ரா என்பவர் இருந்த நிலையில் இப்போது அந்த இடத்திற்கு வானதி சீனிவாசன் செல்கிறார். கோவை-சென்னை என இதுவரை வலம் வந்த வானதி, இனி காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தேசம் முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சாதித்துவிட்டார்
அண்மையில் வெளியிடப்பட்ட பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் பொறுப்பு வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அதிரடி மாற்றமாக வானதிக்கு தேசியப் பதவி தரப்பட்டுள்ளது. தனது பொறுமையால் வானதி சாதித்தேவிட்டதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர் கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்கள்.