பொறுத்திருந்து பாருங்கள்... இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்... வானதி சீனிவாசன் அதிரடி
சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள வி.பி.துரைசாமியை தாம் மனதார வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மாற்றுக்கட்சிகளில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணையக்கூடியவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிட இயக்கங்களில் இருந்த மூத்த நிர்வாகிகள் தேசியக் கட்சியான பாஜகவை தேர்ந்தெடுத்து இணைவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதன் மூலம் பாஜகவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம் எனவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள், கட்சி தமிழகத்தில் எங்கு இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் இணைவது சரியான விடையாக இருக்கும் எனக் கருதுவதாக கூறியுள்ளார்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து வி.பி.துரைசாமியை போன்று யார் வந்தாலும் அதனை தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்ப்பதாக தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
உடம்பெல்லாம் நீலமாக மாற.. 2 முறை அடுத்தடுத்து கொத்திய பாம்பு.. பரிதாபமாக உயிரிழந்த உத்ரா
மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைகிறார்கள் என்றால் எங்கள் கட்சி வலுவாக இருப்பதால் தானே இணைகிறார்கள், இல்லை என்றால் எப்படி வருவார்கள் என்றும், சிலர் தவறான பரப்புரை செய்து வருவதாகவும் வானதி தெரிவித்தார். தூய்மையான அரசியலை முன்வைத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் பாஜகவில் இணையலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.