வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் - சென்னைக்கு வந்த பாமகவினரை தடுத்த காவல்துறை
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வந்த பாமகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
சென்னை: தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்த வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னையில் பாமக இளைஞர் அணித் தலைவர் , அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று காலை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு ஏராளமான வாகனங்களில் வந்த பாமகவினரை போலீசார் வண்டலூர் அருகே தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாகனங்களில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சென்னையை நோக்கி வரும் பாமகவினரின் வாகனங்களை வேலூர் மாவட்ட எல்லை முடிவான பொன்னியம்மன் பட்டறை பகுதியிலேயே காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை தலைமையிலான 100 க்கும் மேற்பட்ட போலீசார் திருப்பி மீண்டும் வேலூர் நோக்கி அனுப்பி வைத்தனர்.
சென்னை நோக்கி வந்த தனியார் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வருவதால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் முக்கிய சாலைகளிலும் தடுப்புகளை அமைத்து பாமகவினரை போரட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல விடாமல் தடுக்க காவல்துறை தீவிரம் காட்டிவருகின்றனர். சாலையில் போக்குவரத்து நெரிசலில் நிற்கும் பேருந்து மீது சிலர் ஏறி நின்றுள்ளனர்.
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில் 100 பாமக நிர்வாகிகள் கைது
இதனிடையே இந்த போராட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடந்த காலங்களில் அனைத்து சமுதாய நலன்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் எவ்வாறு போராடினவோ, உழைத்தனவோ, அதேபோல் இப்போது வன்னியர் 20% தனி இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு அனைத்து சமுதாயங்களும் மனமுவந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வன்னியர் சமூகத்திற்கு மட்டுமின்றி அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தான் பா.ம.க.வின் கொள்கை; அதை பா.ம.க. நிச்சயம் சாதிக்கும். கடந்த காலங்களில் எந்த சமுதாயத்திற்கு, என்ன பாதிப்பு வந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி எப்படி ஓடோடி வந்து குரல் கொடுத்ததோ, போராடியதோ அதேபோல், இனி வரும் காலங்களிலும் அனைத்து சமுதாயங்களின் நலன்கள், சமூகநீதிக்காக போராடும்; குரல் கொடுக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.