வன்னியர் உள்ஒதுக்கீடு: ராமதாசுடன் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை-உறுதியாகும் அதிமுக-பாமக கூட்டணி?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதி உறுதியாகும் என தெரிகிறது. வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாகடர் ராமதாஸை தமிழக அமைச்சர்கள் குழு நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக திடீரென வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.
வன்னியருக்கு 20% இடஒதுக்கீடுக்குப் பதில் உள்ஒதுக்கீடு-.நிராகரித்தால் அரசியல் முடிவு எடுப்போம்: பாமக
பரபர சந்திப்புகள்
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையிலான குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது.
வன்னியருக்கு உள்ஒதுக்கீடு
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து பாமகவின் அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று மிக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் வன்னியருக்கு 20% தனி இடஒதுக்கீட்டுக்குப் பதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு அதிக அளவிலான உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பாமகவின் நிலைப்பாட்டில் மிக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவுக்கு பாமக நிபந்தனை
பாமகவின் இந்த கோரிக்கையை சட்டசபை கூட்டத் தொடருக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டும்; அப்படி நிறைவேற்றாவிட்டால் பாமக முக்கியமான அரசியல் முடிவை எடுக்க நேரிடும் எனவும் தமிழக அரசுக்கும் அதிமுகவுக்கும் நிபந்தனையும் விதித்துள்ளது. இதனால் வன்னியர் உள்ஒதுக்கீட்டை நிறைவேற்றிய வேண்டிய நெருக்கடியில் அதிமுக அரசு உள்ளது.
ராமதாஸுடன் நாளை பேச்சுவார்த்தை
இதனிடையே டாக்டர் ராமதாஸை நாளை திங்கள்கிழமையன்று தைலாபுரத்தில் மீண்டும் அமைச்சர்கள் குழு சந்தித்து பேச உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது உள்ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான அதிமுக அரசின் நிலை விவரிக்கப்பட உள்ளது. பாமக தமது கோரிக்கையில் இறங்கி வந்துள்ளதால் அதிமுகவுடனான கூட்டணியும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.