ஸ்டாலின் ஆவேச பேச்சு.. திமுகவுக்கு எதிராக திரும்புமா வன்னியர் வாக்கு வங்கி?
வன்னியர்களின் வாக்கு வங்கியை திமுக இழந்துவிடும் நிலை உருவாகி உள்ளது.
சென்னை: டாக்டர் ராமதாசை பார்த்து சூடு, சொரணை இல்லையா என்ற ஒற்றை வார்த்தையால் ஒட்டுமொத்த வன்னியர்களின் ஓட்டுகள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டாக்டர் ராமதாஸ் பற்றி தமிழ்நாட்டுக்கே நன்றாக தெரிந்த விஷயம், யார் நிறைய சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்பார் என்பது. ஆனால் தெரியாத ஒரு விஷயம் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ஸ்டாலின் இவ்வளவு தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவாரா என்பதுதான்!!
டாக்டர் ராமதாஸ் கூட்டணி வைத்து செய்த காரியத்தை விட அதற்கு ஸ்டாலின் கருத்து சொன்ன விதமே அதிர்ச்சியாக உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது.
நிர்வாக சீர்கேடு
டாக்டர் ராமதாஸ் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி. மருத்துவர்... எல்லா துறைகளிலும் உள்ள நிர்வாக சீர்கேடுகளை, தகுந்த ஆதாரத்தோடு, புள்ளிவிவரங்களை தைரியமாக எடுத்து சொல்பவர். இல்லையென்றால், தமிழக அரசின் பல சீர்கேடுகளும், ஊழல் மற்றும் நிர்வாக திறமையின்மை போன்ற விவரங்கள் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
வயதில் மூத்தவர்
டாஸ்மாக்கை மூடக் கோரி நீண்ட காலமாக போராடி வருபவர். பாரம்பரியம், கலாச்சாரம், போன்றவற்றை பேணி காத்து வருபவர். 30% உள்ள ஒரு சமூகத்தில் இருந்த வந்த தலைவர். அவர் கட்சி யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கு உள்ளது. இது எல்லாவற்றையும்விட வயதில் மூத்தவர்.
வயதில் மூத்தவர்
டாஸ்மாக்கை மூடக் கோரி நீண்ட காலமாக போராடி வருபவர். பாரம்பரியம், கலாச்சாரம், போன்றவற்றை பேணி காத்து வருபவர். 30% உள்ள ஒரு சமூகத்தில் இருந்த வந்த தலைவர். அவர் கட்சி யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கு உள்ளது. இது எல்லாவற்றையும்விட வயதில் மூத்தவர்.
இட ஒதுக்கீடு
அப்படி இருக்கும்போது, ஸ்டாலின் சொன்ன கடுமையான வார்த்தைகள் எந்த அளவுக்கு திமுகவுக்கு பலவீனமாக போகும் என்று தெரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால், கடந்த காலங்களில் வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்ததே திமுகதான். ராமதாஸை அங்கீகரித்தே இந்த இட ஒதுக்கீட்டைக் கொடுத்தார் கருணாநிதி. தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் பதவியை திமுக ஆட்சியில் வன்னியரான காசிவிஸ்வநாதனுக்கு தந்தார்கள். வன்னியரான ராமசாமியை அதில் உறுப்பினர் ஆக்கினார்கள்.
வன்னியர்கள் ஆதரவு
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக வன்னியரான நீதியரசர் ஜனார்த்தனன் மற்றும் மனித உரிமைகள் ஆணையத் தலைவராக வன்னியரான சம்பந்தம் ஆகியோரை நியமித்தது திமுகதான். அதனால்தான் பாமகவுக்கு எதிராக போட்டியிட நேர்ந்தபோதும் கணிசமான வாக்குகள் திமுகவுக்கும் வந்து விழுந்தது. பாமகவின் வாக்கு வங்கியாக இருந்தாலும், திமுகவுக்கும் கணிசமான பங்கு கிடைத்துக் கொண்டுதான் உள்ளது.
ஜெயலலிதா, கருணாநிதி
ஆனால் இந்த ஆதரவு, வாக்கு என எல்லாவற்றையும் ஒரே பேச்சால் பேசி இழுத்து மூடிவிட்டதுபோல இருக்கிறது ஸ்டாலினின் பேச்சு. தனிப்பட்ட மனதில் பட்ட கருத்தை பொத்தாம் பொதுவாக பொதுவெளியில் பேசுவது எந்த அளவுக்கு வாக்கு சதவீதத்தை குறைக்கும் என்பதை கருணாநிதி இருந்திருந்தால் நன்றாகவே உணர்ந்திருப்பார். அவ்வளவு எதற்கு? எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் சந்தித்த கருணாநிதி, ஜெயலலிதாகூட இப்படி ஒரு வார்த்தையை யார் மீதும் பயன்படுத்தியது இல்லை. குறிப்பாக ராமதாஸ் மீது இருவருமே காட்டியதில்லை.
வாக்கு வங்கி குறையுமா?
சாதி கட்சியாக இருந்தாலும் எல்லா வன்னியர்களுமே பாமகவுக்கு ஓட்டு போடுவார்கள் என்பது சாத்தியமில்லை. ஆனால் இப்போது அதற்கான வழியை தேடி தந்துள்ளது ஸ்டாலினின் பேச்சு. ராமதாஸை இப்படி பேசியதற்கு இன்னும் அவர் தரப்பில் இருந்தும், அன்புமணி தரப்பில் இருந்தும் பதில் ஏதும் வரவில்லை. அப்படியே வந்தாலும் கண்டிப்பாக வன்னியர்களை உசுப்பேத்தும்படிதான் அந்த பதிலடி இருக்கும். இதனால் திமுகவின் வாக்கு வங்கி வீதம் வட மாவட்டங்களில் பலத்த அடியை பெறுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.