கமல், சீமான், உதயநிதி... முக்கிய பிரபலங்கள் இன்று வேட்பு மனு தாக்கல்
சென்னை: கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான், உதயநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை முதல் 19ஆம் தேதி வரை மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படவில்லை.
முதல் நாள்
முதல் நாளிலேயே துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்புமனு தக்கல் செய்தார். அதேபோல திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தக்கல் செய்தார். மேலும், பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல் நாளில் 50க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
நாம் தமிழர் சீமான்
கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கடந்த மார்ச் 7ஆம் தேதி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும், இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்குகிறார். இதற்காக திருவொற்றியூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் இன்று மதியம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல் முறையாகச் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். 2019ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளைப் பெற்ற கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் கோவை சென்றார். பின்னர் மதியம் 1 மணியளவில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
டிடிவி தினகரன்
தேமுதிக, ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து அமமுக இம்முறை தேர்தலை எதிர்கொள்கிறது. அக்கட்சித் தலைவர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று மதியம் 2 மணியளவில் அவர் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரும் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், அவர் திமுக சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.