கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த வசந்தகுமார்!
சென்னை: கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருண்னனை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டுள்ளார் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வசந்தகுமார்.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தொழிலதிபர் வசந்தகுமார் போட்டியிட்டார். அப்போது அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டார். 2014ம் ஆண்டு தேர்தலில் வசந்தகுமாரை பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்தநிலையில், கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் வசந்தகுமாார் போட்டியிட்டார். நாங்குநேரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வசந்தகுமார் வெற்றி பெற்று எம்எல்ஏ.,வாக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் வசந்தகுமார் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டார்.
இந்த முறையும் எதிரில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் நிறுத்தப்பட்டார். கடந்த தேர்தலில் தன்னை தோற்கடித்த பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களப்பணி ஆற்றினார்.
என்ன அநியாயம் இது.. அந்த ஒரு பேச்சுதான் கனிமொழியின் அரசியலை மாற்றியது.. வெற்றி கைவசமான கதை!
இந்த நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை தொற்கடித்தார். கடந்த 2014 ஆண்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதற்கு பழிக்கு பழியாக இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வசந்தகுமார் வெற்றிக் கனியை பறித்துள்ளார்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 6,27,235 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 3,67,302 வாக்குகளை பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் 17,069 வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயன்ரின் இடம்பிடித்தார்.
கன்னியாகுமரி எம்பி.,யாக தேர்வாகி இருப்பதால், விரைவில் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்ய இருக்கிறார். அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் 4 செயல்தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் வசந்தகுமார் வர்த்தகராகவும் இருக்கிறார். வேட்பு மனுவில் தனக்கு ரூ.417 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் வசந்தகுமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.