ஆமா.. நீங்க சொல்வது உண்மைதான்.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிரித்தபடி பதிலடி கொடுத்த வசந்தகுமார்
சென்னை: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கடைகளில், வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் வசந்தகுமார்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், தொழிலதிபரான வசந்தகுமாரின் கடைகளில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், அங்கும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி வசந்தகுமாரிடம், நிருபர்கள் கேட்டபோது மிகவும் கேஷுவலாக சிரித்தபடி பதிலடி கொடுத்தார்.
80-களில் காணி நிலம்.. இன்று கல்வி தந்தைகள் ஆன கதை.. எல்லாம் மார்க்கெட்டிங் கண்ணா மார்க்கெட்டிங்!
பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது உண்மைதான். எனது கடைகளில் பணப்புழக்கம் இருக்கத்தான் செய்கிறது. நான் பொருட்களை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதில்லை. பணம் பெற்றுக்கொண்டு தான் பொருட்களை வழங்குவது வழக்கம். எனவே எனது கடைகளில் கண்டிப்பாக பணப்புழக்கம் இருக்கத்தான் செய்யும்.
மற்றபடி வருமானவரித்துறை சோதனைகளுக்கு நான் கவலைப்படப் போவது கிடையாது. 38 வருடங்களாக முறையாக வருமான வரி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரே நபர் நான்தான். அதுவும் ஆண்டுக்கு ஆண்டு வருமான வரியை அதிகமாக செலுத்திக் கொண்டிருப்பது நான்தான். எனவே மடியில் கனமில்லை என்பதால் எனக்கு எந்த பயமும் கிடையாது. இவ்வாறு வசந்தகுமார் பதில் தெரிவித்தார்.