"தரகுவேலை" செய்தால் நிச்சயம் சலிப்புதான் வரும் மணியன்.. போட்டு தாக்கும் ஷாநவாஸ்!
தமிழருவி மணியன் குறித்து ஆளூர் ஷா நவாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "தரகுவேலை செய்தால் சலிப்புதான் வரும் மணியன்.. மக்களுக்காக நின்றார் சோர்வு வராது" என்று தமிழருவி மணியனின் அரசியல் விலகல் குறித்து விசிகவின் ஆளுர் ஷாநவாஸ் காட்டமான ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்!
தமிழருவி மணியன் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவர், திடீரென ரஜினி பக்கம் சாய்ந்தார்.. ரஜினியை கடைசிவரை அளவுக்கு அதிகமாக நம்பியவர் இவர்தான்.. அதேபோல மக்களையும், ரசிகர்களையும் பல்ஸ் இறங்காமல் நம்பிக்கையை விதைத்ததும் சாட்சாத் இவரேதான்.
கிட்டத்தட்ட "அம்மா இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார்" ரேஞ்சுக்கு ரஜினி பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் இவர்.. முதல்வர் பொறுப்பை ஏற்க சொல்லி இருக்கிறேன், நல்ல பதிலை சொல்வார் என்று கடைசி வரை வாய் வலிக்காமல் சொன்னவரும் இவரேதான்.. கடைசியில் சலித்துபோய், டாடா காட்டிவிட்டும் கோபித்துக் கொண்டும் போய் விட்டார்.
காமராஜர், விபிசிங், ஹெக்டே, மூப்பனார், மோடி, ரஜினி- 54 ஆண்டுகளாக அரசியலில் போணியாகாத தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்
தமிழருவி மணியனின் இந்த செயலை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் விமர்சித்தனர்.. சிலர் வருத்தமாக பதிவு போட்டனர்.. சிலர் கிண்டலாக பதிவு போட்டனர்.. ஆனால், ஆளூர் ஷா நவாஸ் இதை வேறு விதமாக அணுகி உள்ளார்.. அது சம்பந்தமாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.
ஐயா நல்லகண்ணு
அதில், "தேர்தலில் வென்றதில்லை. பதவிகளில் அமர்ந்ததில்லை. அதற்காக மனம் வெதும்பி, மக்களை குறை சொல்லி, மண்மீது சாபமிட்டு, நான் பொதுவாழ்வை விட்டே போகிறேன் என்று சொல்லாதவர் ஐயா நல்லகண்ணு. 96 வயதிலும் பயணிக்கிறார். மக்களுக்காக நின்றால் சோர்வு வராது. தரகு வேலை செய்தால் சலிப்பு தான் வரும் மணியன்!" என்று தெரிவித்துள்ளார்.
தமிழருவி மணியன்
தமிழருவி மணினைவிட, ஆளூர் ஷா நவாஸ் வயதில் சிறியவர்.. அனுபவமும் அவரைவிட குறைவு.. ஆயினும் இந்த பதிவு மிக சரியானதாகவே பார்க்கப்படுகிறது.. பிராக்டிக்கலாக இதை அணுகி இருக்கிறார் ஆளூர்.. இன்னொரு பதிவும் போட்டுள்ளார்.. "தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி உள்ளார்!" என்று அர்ஜுன மூர்த்தி ட்வீட் போட்டிருந்தார்.
ட்வீட்
இதற்கு ஆளூர், "ஏன் செய்ய முடியாது? 8 வழிச்சாலையை எதிர்க்கும் மக்களுக்காக குரல் கொடுக்கலாம். #GST இழப்பீடு, பேரிடர் நிவாரண நிதி தரச் சொல்லி மோடியை வலியுறுத்தலாம். #எய்ம்ஸ் என்னாச்சு என கேட்கலாம்" என்று ஆலோசனை தந்துள்ளார்.. இதுவும் நியாயமானதே..!
போராட்டம்
வழக்கமாக, ரஜினி என்றாலே பல சமயம் கொந்தளித்துவிடுவார் ஆளூர் ஷா நவாஸ்.. இப்படித்தான் ஒருமுறை, சென்னையில் 2 வருஷத்துக்கு முன்பு ஐபிஎல் போட்டி நடந்தது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில போராட்டங்கள் நடந்தன.. இந்த போராட்டத்தை நடத்தியது தமிழ் தேசிய இயக்கங்கள்... அந்த சமயத்தில் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.. இறுதியில் அந்த போலீஸ்காரரின் சட்டையை அந்த நபர் பிடித்துவிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. மிகப்பெரிய மோதல் எழும் சூழலும் ஏற்பட்டாலும், இறுதியில் அது தவிர்க்கப்பட்டது.. அந்த நபரை போலீசார் கைது செய்து விட்டனர். இதற்கு ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியிருந்தார்.
போலீசார்
"போலீஸ்காரர்கள் நமக்காக பாதுகாப்பு பணியில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அவர்களை சட்டையை பிடிப்பது நியாயமா? வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான்" என்று வக்காலத்து வாங்கி வந்தார் ரஜினிகாந்த். ஆனால், தூத்துக்குடியில் பென்னிக்ஸ் மரணத்தில் ரஜினி வாயே திறக்கவில்லை..
வாய் திறக்காத ரஜினி
இதற்குதான் அப்போது ஆளூர் ஷா நவாஸ் "ரஜினி சார்.. சீருடைக்கு நீதி கேட்டீங்களே.. இன்று போலீசால் தாக்கப்பட்டு பலியாகியுள்ள அப்பாவிகளுக்காகவும் பேச வேண்டும்... போலீசை தாக்கிய குற்றவாளி எவரும் தப்ப முடியாது. ஆனால், யாரை தாக்கினாலும் போலீஸ் தப்பி விடுகிறது எனவே பெரும் குரல் இதற்கே தேவை!..." என்று சாத்தான்குளம் மரணம் குறித்து கேட்டிருந்தார். அதன் பிறகே ரஜினி வாயைத் திறந்தார்.. இது வரலாறு!
இடித்துரைப்பு
ஆக, ரஜினி என்ற தனிப்பட்ட நபரை விமர்சிப்பது ஆளூரின் நோக்கம் இல்லை என்றாலும், ரஜினி ஒருசில விஷயங்களை கண்டிக்க வேண்டும் (அப்பாவி மக்கள் எதிர்பார்த்தது போல) என்று எதிர்பார்த்தார் என்பதே உண்மை.. அதனால்தான், இன்று தமிழருவி மணியனையும், அர்ஜுன் மூர்த்தியையும் இடித்துரைத்து ட்வீட் போடும் நிலை ஆளூருக்கு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது!