8 வழி சாலை.. ஒரே நேர்கோட்டில் பாமக, விசிக.. மக்களுக்காக இணைந்து அதிரடி காட்டுவார்களா?
டாக்டர் ராமதாஸ் - திருமாவளவன் மீண்டும் இணைய வேண்டும் என்பதே நமது விருப்பம்
சென்னை: இன்றைய நாளில், தமிழகத்துக்கு எதிரான பிரச்சனைகளில் ஒரே நேர்கோட்டில் பயணித்து வருபவர்கள் டாக்டர் ராமதாசும்.. விசிக தலைவர் திருமாவளவனும்தான்! இதை கேட்பதற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், பாமகவும், விசிகவும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டை பல விஷயங்களில் எடுத்து வருவது மறுக்க முடியாததே!
2 நாளைக்கு முன்பு, சென்னை ஏர்போர்ட்டில் எம்பி திருமாவளவன் பேசும்போது, "8 வழி சாலை திட்டத்தை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
எட்டு வழி சாலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், அன்புமணியும் இந்த திட்டத்தை எதிர்த்துதான் வந்து கொண்டு இருக்கிறார். இந்தி திணிப்பு, என்ற விஷயம் வரும்போதும் பாமக, விசிகவும் ஒரே நிலைப்பாட்டில் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்து வருகிறார்கள். இப்படிஇரு கட்சிகளும் மக்களுக்கு எதிரான திட்டத்தில் ஒரே நிலையில் இருப்பது நல்ல விஷயம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச ஆரம்பித்துள்ளனர்.
காவியங்கள்
டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், இவர்கள் இருவரை தவிர்த்து தமிழக வரலாறை எழுதி விட முடியாது. இவர்கள் அவரவர் சமூகத்தின் அடையாளங்கள், காலம் மாறா அழியா காவியங்கள். தலித் சமுதாயத்தின் மாபெரும் தலைவர் திருமாவளவன் என்றால் வன்னிய சமுதாயத்தின் காவல் தெய்வம் டாக்டர் ராமதாஸ்.
சாதிக்கட்சி
பாமகவை வேண்டுமானால் ஜாதி கட்சி என்று சாதாரணமாக முத்திரை குத்தி விடலாம் என்றாலும், தமிழன், தமிழ் மண்ணுக்கு ஒன்று என்றால், இந்த இருவருமே சாதிகளை தூக்கி எறிந்துவிட்டு களத்தில் குதித்து விடுவார்கள். இதற்கு பல விவகாரங்களை லிஸ்ட் போடலாம்.
அரசியல்
ஆனால் ஒரு கவலை என்னவென்றால், ஜாதி இவர்களை பிரித்து வைத்துள்ளது என்பதே. சாதியை தவிர்த்துவிட்டு அரசியல் செய்ய முடியாது என்பதை இருவருமே உணர்ந்துள்ளார்கள் எனினும், இவர்கள் இணைந்தால், இரு சமூகங்களுக்கும் மேலும் சிறந்தது என்பதே கசப்பான உண்மை.
வன்முறைகள்
இவ்வளவு காலம் நிறைய உயிர்பலிகள், வன்முறைகள், மோதல்கள் எல்லாம் பார்த்தாகிவிட்டது. இனியும் இரு கட்சிகளுக்கும் பிரிவு, கால இடைவெளி தேவையா என்பதுதான் கேள்வி. இவர்கள் இணைந்தால் கிட்டத்தட்ட முக்கால்பாகம் தமிழ்நாடு ஒன்றிணைந்ததுபோல ஆகிவிடும். அமைதியும் பெறும். இருவருக்குமே தமிழ்நாட்டில் வாக்கு வங்கி நிறையவே உள்ளது.
இளைஞர்கள்
எப்படியும் இவர்களை திராவிட கட்சிகள் தனித்து செயல்பட விடாமல், தங்களுடன் வளைத்து போட்டு கொள்ளவே ஆர்வம் காட்டும். ஒருகட்சி பாமகவை அந்த பக்கம் இழுத்தால், இன்னொரு திராவிட கட்சி விசிகவை தன்பக்கம் வைத்து கொள்ளும். சுருக்கமாக சொல்ல போனால், விசிகவையும், பாகமவையும் சேர விடாமல் மிக கவனமாக பார்த்து கொள்ளும். இந்த அளவுக்கு பலம் நிறைந்த இரு கட்சிகளும் தங்களை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்காக இணைய வேண்டும் என்பதே நம் ஆசை.. இதை நிறைவேற்றுவார்களா இரு கட்சி தலைவர்களும்!