‛அண்ணன்’ என வாழ்த்திய அண்ணாமலை.. ‛சகோதரர்’ என நன்றி கூறிய திருமாவளவன்! டுவிட்டரில் நெகிழ்ச்சி!
சென்னை: ‛அண்ணன்' எனக்கூறி வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‛சகோதரர்' எனக்கூறி டுவிட்டரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவராக இருப்பவர் தொல் திருமாவளவன். எம்பியாக இவருக்கு 60 வயது ஆகிறது. திருமாவளவன் ஆகஸ்ட் 17 ல் பிறந்தநாளை கொண்டாடினார்.
இவரது பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்டவற்றை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேற்கொண்டனர்.
மகன் போல் என்னை அரவணைத்தார் நெல்லை கண்ணன்! திருமாவளவன் வேதனையுடன் இரங்கல்!
குவிந்த வாழ்த்து
மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொல் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், ‛‛மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் அவர்களை நெஞ்சார வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்'' என கூறியுள்ளார்.
அண்ணாமலை வாழ்த்து
இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா, மதுரை எம்பி சு வெங்கடேசன் உள்பட அவரது தோழமை கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான அண்ணன் திரு தொல் திருமாவளவனுக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியிருந்தார்.
திருமாவளவன் நன்றி
இதற்கு தற்போது தொல் திருமாவளவன் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தொல் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அன்பு சகோதரர் அண்ணாமலைக்கு நெஞ்சார்ந்த நன்றி'' என கூறியுள்ளார்.
சனாதானத்தை எதிராக பேசிய திருமா
முன்னதாக ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சென்னையில் திருமாவளன் பிறந்தாளையொட்டி நடந்த விழா நடந்தது. இதில் திருமாவளவன் பேசும்போது ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அப்போது, ‛‛தம்பி என்ற உணர்வுடன் கூறுகிறேன். பெரியாரியத்தை முழுமைப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் கூட இதில் தயக்கம் இருக்க கூடாது. திமுக 6வது முறை ஆட்சிக்கு வந்திருந்தால் சனாதானத்துக்கு எதிரான கொள்கை தான் காரணம். இதை தொடர வேண்டும்'' என கூறியிருந்தார். இதற்கு மேடையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‛‛எக்காரணத்தை கொண்டு திமுக தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது. பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது '' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.